2036 ஒலிம்பிக் கனவு: 40 பதக்கங்கள் என்பது எட்டாக்கனியாகவே தொடரும் - முன்னாள் வீரர் ரஞ்சன் சோதி எச்சரிக்கை

2036 ஒலிம்பிக் போட்டிகளில் 30 முதல் 40 பதக்கங்களை வெல்வது என்பது தற்போதைய சூழலில் கடினமான இலக்கு என துப்பாக்கி சுடும் வீரர் ரஞ்சன் சோதி கருத்து தெரிவித்துள்ளார்.
2036-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெற இந்தியா தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், அப்போட்டிகளில் 30 முதல் 40 பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற அரசின் இலக்கு எட்ட முடியாத தொலைவில் இருப்பதாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் ரஞ்சன் சோதி கவலை தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் விளையாட்டு வீரர்களைக் கண்டறிதல் மற்றும் பயிற்சி அளிப்பதில் இந்தியா காலதாமதமாகச் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா ஈரிலக்க எண்ணிக்கையிலான பதக்கங்களைக்கூட ஒருமுறை கூட வென்றதில்லை என்பதை நினைவூட்டிய ரஞ்சன் சோதி, டோக்கியோ 2020 போட்டிகளில் வென்ற ஏழு பதக்கங்களே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக உள்ளது என்றார். 2036-ஆம் ஆண்டிற்கு இன்னும் பத்து ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், பள்ளி மாணவர்களிடையே திறமையாளர்களை இப்போதே கண்டறியும் திட்டங்களை அரசு மற்றும் விளையாட்டு சம்மேளனங்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
விளையாட்டுத் துறையில் உலகத்தரம் வாய்ந்த வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் உட்கட்டமைப்பு, நவீன உபகரணங்கள், பயிற்சி, மற்றும் வீரர்களுக்கான வேலைவாய்ப்பு பாதுகாப்பு ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களில் அரசு பெரும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்குத் தேவையான பயிற்சி மையங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், தற்போதுள்ள மையங்களிலும் உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் வளரும் வீரர்களைப் பெரிதும் பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பதக்க வாய்ப்புகள் அதிகம் உள்ள விளையாட்டுகளில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், சைக்கிளிங், மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் அதிக பதக்கங்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டினார். லண்டன் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக இங்கிலாந்து சைக்கிளிங் விளையாட்டில் காட்டிய தீவிரமான ஈடுபாடு போல, இந்தியாவும் திட்டமிட்டுச் செயல்பட்டால் மட்டுமே 2047-ஆம் ஆண்டிற்குள் விளையாட்டுத் துறையில் உலகத் தலைவராக உயர முடியும் என்று அவர் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார்.









