அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்: பழனிசாமியின் உத்தரவை நிராகரித்த முக்கிய நிர்வாகிகள்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை நிராகரித்து, மூத்த தலைவர்கள் நாத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள கட்சியின் மாநில அளவிலான போராட்டங்களை வழிநடத்துமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்திருந்த உத்தரவை, கட்சியின் மூத்த தலைவர்களான நத்தம் ஆர்.விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பகிரங்கமாக நிராகரித்துள்ளனர். விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடத்தப்படவிருந்த நிலையில், இவர்களின் இந்த திடீர் முடிவு அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
கட்சியின் தலைமை, நத்தம் ஆர்.விஸ்வநாதனை ராமநாதபுரத்திலும், எஸ்.பி.வேலுமணியை தேனியிலும் போராட்டங்களை வழிநடத்துமாறு பணித்திருந்தது. இதேபோல, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் முறையே சேலம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் போராட்டத்திற்குத் தலைமை தாங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும், தங்களுக்குச் சொந்தமான மாவட்டங்கள் ஒதுக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, போராட்டத்தை முன்னின்று நடத்த முடியாது என நத்தம் விஸ்வநாதனும், எஸ்.பி.வேலுமணியும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்கள், கட்சித் தலைமையின் உத்தரவை மீறியதற்கான காரணங்களையும் விளக்கிக் கூறியுள்ளனர். கட்சியின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் அதே பதவிகளில் அமர்த்துவதாக எடப்பாடி பழனிசாமி அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாகத் தாங்கள் எழுதிய கடிதங்களுக்குப் பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், தங்களுக்குச் சொந்தமில்லாத மாவட்டங்களில் போராட்டத்தை நடத்தக் கூறுவது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகளைப் புறக்கணிக்கும் செயலாகும் என்றும் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த மோதல் போக்கு தற்பொழுது பொதுவெளியில் வெளிப்பட்டுள்ளதால், அதிமுகவிற்குள் புதிய திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே உட்கட்சி பூசல்களால் பிளவுபட்டிருந்த அதிமுகவில், அதிருப்தி தலைவர்கள் அனைவரும் இணைந்து சட்டப்பேரவையில் தனி அணியாகச் செயல்படுவார்களோ என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது. கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் வெறும் விவாதங்களாக மட்டும் இருக்காமல், அடுத்தகட்டமாக முறையான அரசியல் வடிவத்தைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.









