அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: சபாநாயகரின் முடிவை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க நடவடிக்கையை ரத்து செய்த சபாநாயகரின் முடிவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சட்டப்பேரவையில் கட்சி கொறடாவை மீறி மாற்று கட்சியான டி.வி.கே-வுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க நடவடிக்கையை ரத்து செய்த பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் முடிவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த முக்கிய வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு, அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதிநீக்கம் கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியான அதிமுக, தங்களது உறுப்பினர்களின் செயலை மன்னித்து, அவர்களை தொடர்ந்து கட்சி உறுப்பினர்களாக அங்கீகரித்து வைத்துள்ள நிலையில், தகுதிநீக்க நடவடிக்கையை தொடர வேண்டிய அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டினர். ஜூலை 25, 2026 அன்று அதிமுக பொதுச்செயலாளர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில், இந்த 21 எம்.எல்.ஏ.க்களின் செயலை மன்னிப்பதாகத் தெரிவித்திருந்ததைக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், அதன் பிறகு பத்தாவது அட்டவணையின் கீழ் தகுதிநீக்கத்திற்கான எந்தக் காரணமும் எழவில்லை என்று திட்டவட்டமாகக் கூறினர்.
திருத்தணியைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.வி. செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. கட்சி விதிகளில் அல்லது கட்சியின் உட்புற விவகாரங்களில் தலையிட மனுதாரருக்கு எவ்வித அதிகாரமும் அல்லது தகுதியும் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் உறுப்பினர் தகுதியைத் தாமாக முன்வந்து விட்டுக் கொடுத்துவிட்டதாக மனுதாரர் முன்வைத்த வாதங்களை, முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறான புரிதல் கொண்டது என்று கூறி நீதிமன்றம் நிராகரித்தது.
கட்சி பொதுச்செயலாளர் மன்னிப்பு கடிதம் வழங்கிய பிறகும், சபாநாயகர் அந்த தகுதிநீக்க மனுவைச் சுயேச்சையாகத் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நீதிபதிகள் முற்றிலுமாக நிராகரித்தனர். இந்த வழக்கில் சட்டமன்றச் செயலாளர் தரப்பில் வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே. சக்திவேல் ஆஜராகி வாதிட்ட நிலையில், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சபாநாயகரின் முடிவே இறுதியானது மற்றும் சரியானது என்பதை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.









