அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா: சென்னை உயர் நீதிமன்றத்தில் சபாநாயகர் விளக்கம்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா தானாக முன்வந்து செய்யப்பட்டது என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த இந்த வழக்கில், எம்.எல்.ஏக்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தபோது, அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டபோது, அது உண்மையானதுதானா மற்றும் அவர்கள் தானாக முன்வந்துதான் இதைச் செய்தார்களா என்பதை உறுதிப்படுத்த சபாநாயகர் என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட விசாரணை (Limited Inquiry) நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்களிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர்கள் தாங்கள் எழுதிய கடிதங்கள் தங்களுடைய சொந்த கையெழுத்தில்தான் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களின் நடத்தை அல்லது பேச்சில் எவ்விதமான கட்டாயமோ அல்லது அழுத்தமோ இருந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று சபாநாயகர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், இந்திய அரசியலமைப்பின் 190(3)(பி) பிரிவின் விதிமுறைகள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற விதிகள் 22 ஆகியவற்றின் அடிப்படையிலேயே இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதற்கு தான் முடிவெடுத்ததாக சபாநாயகர் தனது விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். ராஜினாமா கடிதங்கள் அளிக்கப்பட்ட சூழலில், அவர்கள் எவ்விதமான நிர்பந்தத்திற்கும் உள்ளாக்கப்படவில்லை என்பதை நேரில் உணர்ந்த பிறகு, மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் எழவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சபாநாயகர் நேரில் ஆஜராகாதது குறித்த கேள்வி எழுந்த நிலையில், பேரவைச் செயலகத்தின் நிர்வாகத் தலைவரான செயலாளர் மூலம் பதில் மனு தாக்கல் செய்ய அதிகாரமளித்திருந்ததாக அவர் விளக்கமளித்தார்.
நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும் மதிப்பும் இருப்பதாகவும், எந்தச் சூழ்நிலையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் சபாநாயகர் தனது பிரமாண பத்திரத்தில் உறுதியளித்தார். இதற்கிடையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வி. கிரி மற்றும் எஸ்.ஆர். ராஜகோபால் ஆகியோர், சபாநாயகர் நேரில் ஆஜராகாமல் இருந்தது தொடர்பாகச் சில கேள்விகளை எழுப்பினர். இந்த விவாதங்களுக்குப் பிறகு, வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, விசாரணையை செப்டம்பர் 1, 2026-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.









