திகில் களத்தில் களமிறங்கும் அஜய் தேவ்கன்: புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் புதிய திகில் திரைப்படம் படப்பிடிப்புடன் தொடங்கியது.
திரைப்பட உலகில் பல்வேறு பரிமாணங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் அஜய் தேவ்கன், தற்போது புதிய திகில் மற்றும் திரில்லர் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளன. நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இந்தத் திரைப்படம், மர்மம் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளுடன் ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் என படக்குழுவினர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ரோஹித் ஜுக்ராஜ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே 'சமக்' மற்றும் 'யே காளி காளி ஆங்கேன்' போன்ற பிரபலமான தொடர்களை இயக்கி தனது திறமையை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புகழ்பெற்ற பஞ்சாபி திரைப்படத் தொடரான 'சர்தார் ஜி' வரிசையையும் இவர் இயக்கியுள்ளார். இயக்குநரின் அனுபவம் இந்தத் திகில் படத்திற்குப் கூடுதல் பலமாக அமையும் என்று திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்தத் திரைப்படத்தை அஜய் தேவ்கனின் தயாரிப்பு நிறுவனமான தேவ்கன் ஃபிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இந்த இரு நிறுவனங்களும் ஏற்கனவே 'சைத்தான்' மற்றும் 'ரெய்ட் 2' ஆகிய வெற்றிப் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளன. 'சைத்தான்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அதே கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோரும் இந்தப் படத்தைத் தயாரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.
அஜய் தேவ்கன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், பயம் மற்றும் மர்மம் கலந்த சூழல் உருவாகப்போவதாகவும், தனது புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நடிப்புத் துறையில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் அஜய் தேவ்கன், அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் 'த்ரிஷ்யம் 3' திரைப்படத்திலும் விஜய சால்கோன்கர் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். இப்படியான தொடர் வெற்றிப் படங்கள் மற்றும் அறிவிப்புகள் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன.









