dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடுசிறப்பு கட்டுரை

பூம்புகார் கடலுக்கு அடியில் மறைந்துள்ள பண்டைய நகரம்: மீண்டும் தீவிரமடையும் வரலாற்று ஆய்வு

By Admin
07/09/2026
83 views
பூம்புகார் கடலுக்கு அடியில் மறைந்துள்ள பண்டைய நகரம்: மீண்டும் தீவிரமடையும் வரலாற்று ஆய்வு

பூம்புகார் கடற்கரைப் பகுதியில் பண்டைய வரலாற்றுத் தடயங்களைத் தேடும் புதிய கடல்சார் அகழ்வாராய்ச்சியை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இணைந்து, பூம்புகார் கடற்கரைப் பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கக்கூடிய பண்டைய துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினத்தின் தடயங்களைத் தேடும் ஆய்வைத் தொடங்கியுள்ளன. இந்த முக்கியத்துவம் வாய்ந்த அகழ்வாராய்ச்சிப் பணியை தமிழ்நாடு தொல்லியல் துறை அமைச்சர் ஏ. ராஜமோகன் மற்றும் தொல்லியல் துறை இயக்குநர் வி.பி. ஜெயசீலன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர். இந்த ஆய்வுப் பணிகள் செப்டம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

சுமார் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், கடற்கரையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து இரண்டு முதல் 60 மீட்டர் ஆழம் வரையிலான பகுதிகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். திறமையான தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணத்துவமிக்க நீச்சல் வீரர்கள் அடங்கிய பத்து பேர் கொண்ட குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவில் தொல்லியல் துறை இணை இயக்குநர் முனைவர் யதீஷ் குமார், தொல்லியல் அலுவலர் கே. வசந்தகுமார் மற்றும் பேராசிரியர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆய்வில் நவீன கருவிகளின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலின் தரைப்பகுதியில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் அல்லது பழங்காலக் கட்டுமானங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய சைடு-ஸ்கேன் சோனார் மற்றும் எக்கோ-சவுண்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் சுட்டிக்காட்டும் பகுதிகளில் நீச்சல் வீரர்கள் நேரடியாகச் சென்று அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த ஆய்வின் மூலம் பண்டைய பூம்புகார் துறைமுகத்தின் எல்லைகளை உறுதி செய்யவும், மூழ்கிய கப்பல்கள் மற்றும் கடல் மட்ட மாற்றங்கள் குறித்த விரிவான தரவுகளைச் சேகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பூம்புகார் பகுதி சங்க இலக்கியங்களிலும், மணிமேகலை காப்பியத்திலும் சிறப்பிடம் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில், கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த மரத்தாலான கட்டுமானங்கள், ரோமானிய நாணயங்கள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 2025-இல் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட ஆய்வுகளில், தமிழகம் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மட்பாண்டத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், கடலுக்கு அடியில் பண்டைய குடியிருப்பு இருந்ததற்கான வலுவான சான்றுகள் கிடைத்தன. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தீவிர ஆய்வு, பன்னாட்டு கடல் வணிகத்தில் பூம்புகாரின் பங்கு மற்றும் அதன் வரலாற்றுத் தொன்மையை மேலும் உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#பூம்புகார்
#தொல்லியல்
#கடல்சார்ஆய்வு
#தமிழ்நாடுவரலாறு
#வரலாற்றுஆய்வு
#Poompuhar
#Archaeology
#UnderwaterExcavation
#TamilNaduHistory
#MaritimeHistory
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications