தடகளப் போட்டி: புவனேஸ்வரில் தங்கம் வென்று அசத்திய அன்சி சோஜன் - 7 மீட்டர் தூரம் தாண்ட இலக்கு

புவனேஸ்வரில் நடைபெற்ற இந்திய ஓபன் தடகளப் போட்டியில் கேரள வீராங்கனை அன்சி சோஜன் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்க ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்திய ஓபன் உலக தடகள காண்டினென்டல் டூர் சில்வர் லெவல் போட்டியில், கேரளாவைச் சேர்ந்த நீளம் தாண்டும் வீராங்கனை அன்சி சோஜன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், அன்சி சோஜன் 6.71 மீட்டர் தூரம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக ஷைலி சிங் 6.56 மீட்டர் தூரத்துடன் வெள்ளிப் பதக்கத்தையும், முப்சினா முகமது 6.31 மீட்டர் தூரத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
கலிங்க ஸ்டேடியம் தனக்கு மிகவும் அதிர்ஷ்டமான மைதானம் என்று குறிப்பிட்ட அன்சி சோஜன், இங்கு மீண்டும் தங்கம் வென்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக நடைபெறும் இந்தத் தொடர், தனது வேகத்தையும் உடல் தகுதியையும் பராமரிக்க ஒரு சிறந்த பயிற்சியாக அமைந்ததாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அன்சி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேசிய மாநிலங்களுக்கு இடையிலான மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 6.88 மீட்டர் தூரம் தாண்டி, 22 ஆண்டுகால சாதனையை முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அஞ்சு பாபி ஜார்ஜின் 6.83 மீட்டர் சாதனையை அவர் கடந்து புதிய மைல்கல்லை எட்டினார்.
தற்போது முழு உடல் தகுதியுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ள அன்சி சோஜன், தனது பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுக்கு நன்றி தெரிவித்தார். தனது எதிர்கால இலக்கு 7 மீட்டர் தூரத்தைத் தாண்டுவதே என்று அவர் உறுதியுடன் கூறியுள்ளார். இதற்காக கலிங்க ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள தடகள முகாமுக்குத் தயாராகி வருவதாகவும், தனது ஓடுதளம் மற்றும் தாண்டும் நுட்பங்களை மேலும் மெருகேற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடினமான பயிற்சிகளுக்கு மத்தியில் தனது உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முறையான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது எளிதானது அல்ல என்றாலும், சிறந்த விளையாட்டு வீராங்கனையாகத் திகழ அது அவசியமானது என்பதை உணர்ந்து செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வதே தனது வாழ்நாள் கனவு என்றும், அதற்காக கடினமாக உழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார்.









