ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்: 'Rahman: A Renaissance' அறிவிப்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது வாழ்க்கை வரலாற்றை 'ரஹ்மான்: ஏ ரினைசான்ஸ்' (Rahman: A Renaissance) என்ற பெயரில் புத்தகமாக வெளியிட உள்ளார்.
உலகப்புகழ் பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், தனது வாழ்க்கை வரலாற்றைப் புதிய புத்தகமாக வெளியிடவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த நூலுக்கு ரஹ்மான்: ஏ ரினைசான்ஸ் (Rahman: A Renaissance) என்று பெயரிடப்பட்டுள்ளது. தனது சமூக வலைதளப் பக்கங்கள் வாயிலாக இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்த புத்தகத்தை எழுதுவதில் எழுத்தாளர் ரூபா சக்கரவர்த்தியும் அவருடன் இணைந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் குறித்து ரஹ்மான் தனது பதிவில் விவரித்துள்ளதாவது, இந்த நூல் தனது இசைப்பயணம், புதிய கருத்துகள், தொழில்முறை வாழ்க்கையில் தான் சந்தித்த சவால்கள், தன்னை செதுக்கிய தாக்கங்கள் மற்றும் தனது இசை உலகத்தை உருவாக்கிய பல்வேறு ஆக்கப்பூர்வமான தருணங்களை வாசகர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தக வெளியீடு குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தனது இசை வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய ஏ.ஆர். ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் 1992-ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் முழுமையான இசையமைப்பாளராகத் திரைத்துறையில் அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து மணிரத்னத்துடனான அவரது கூட்டணி இன்றும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் அவரது இசை, உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
இசையுலகில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், பல தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிராமி விருதுகள், கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இத்தகைய புகழ்பெற்ற கலைஞரின் வாழ்க்கைப் பயணம், ஒரு புத்தக வடிவில் வெளிவரவிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.









