மும்பையில் கோலாகலமாக தொடங்கவுள்ள ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் 2026: முழு விவரங்கள் இதோ

மும்பையில் நடைபெறவுள்ள ஆசிய ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 நாடுகளைச் சேர்ந்த 157 இளம் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஆசிய அளவில் 20 வயதிற்கு உட்பட்ட இளம் செஸ் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஆசிய ஜூனியர் மற்றும் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா செஸ் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் புகழ்பெற்ற விளையாட்டு நிகழ்வு, ஆகஸ்ட் 16 முதல் 26-ஆம் தேதி வரை மும்பையில் உள்ள ஐடிசி மராத்தா ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 10 நாடுகளைச் சேர்ந்த 157 இளம் செஸ் வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களில் 6 சர்வதேச மாஸ்டர்களும், 24 ஃபிடே மாஸ்டர்கள் மற்றும் பெண்கள் ஃபிடே மாஸ்டர்களும் அடங்குவர். ஆல் இந்தியா செஸ் ஃபெடரேஷன், ஆசிய செஸ் கூட்டமைப்பு மற்றும் ஃபிடே ஆகியவற்றின் மேற்பார்வையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகள் ரேபிட், பிளிட்ஸ் மற்றும் கிளாசிக்கல் சுவிஸ் என மூன்று வெவ்வேறு முறைகளில் நடைபெற உள்ளன. இதில் கிளாசிக்கல் சுவிஸ் பிரிவில் 157 வீரர்களும், ரேபிட் பிரிவில் 153 வீரர்களும், பிளிட்ஸ் பிரிவில் 151 வீரர்களும் களம் இறங்குகின்றனர்.
இந்தத் தொடர் இளம் வீரர்களுக்கு ஒரு முக்கியத் தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிபெறும் சர்வதேச மாஸ்டர்களுக்கு கிராண்ட் மாஸ்டர் தகுதிக்கான வாய்ப்பும், மற்ற வீரர்களுக்கு சர்வதேச மாஸ்டர் தகுதிக்கான வாய்ப்பும் வழங்கப்படும். இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த், அபிஜித் குண்டே, தேஜஸ் பக்ரே, தானியா சச்தேவ், கோனேரு ஹம்பி போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடி புகழ்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தரவரிசை அடிப்படையில் ஓபன் பிரிவில் சராசரியாக 2054 ஈலோ புள்ளிகளும், ஜூனியர் பெண்கள் பிரிவில் 1885 ஈலோ புள்ளிகளும் கொண்டு வீரர்கள் களமிறங்குகிறார்கள்.
ஓபன் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச மாஸ்டர் மயானக் சக்ரவர்த்தி 2500 ஈலோ புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார். இவரைத் தொடர்ந்து ரஷ்யாவின் ஆர்டெம் பிங்கின் மற்றும் இந்தியாவின் அபூர்வ் காம்ப்ளே ஆகியோர் போட்டியிட உள்ளனர். பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை பிரதிதி போர்டோலாய் முன்னிலை வகிக்க, கஜகஸ்தானின் மரியா கோல்யாவ்கோ மற்றும் துர்க்மெனிஸ்தானின் லாலா சோஹ்ரடோவா ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் அத்வைத் வேமுலா, ஆதித்யா திங்ரா போன்ற இந்திய வீரர்களும் இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.









