மதுரை அருகே சோகம்: திருமணத்திற்கு ஒரு நாள் முன்னதாக சாலை விபத்தில் மணப்பெண் பலி

மதுரை அருகே திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த சாலை விபத்தில் மணப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே நிகழ்ந்த கோர விபத்தில், திருமணம் நடைபெறவிருந்த மணப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் சாத்தயநாயகனூரைச் சேர்ந்த மரியா பெல்சியா என்ற 26 வயது இளம்பெண்ணுக்கும், வெள்ளக்கோடு பகுதியைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை ஊழியரான 29 வயது செபா பாஸ்டின் என்பவருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருமணத்திற்கு முந்தைய நாள் சனிக்கிழமை அதிகாலை இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மரியா பெல்சியா மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கான செவிலியர் தேர்வில் பங்கேற்பதற்காக, தனது வருங்கால கணவர் செபா பாஸ்டினுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் பயணம் செய்தபோது, கோவையில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்றின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த மணப்பெண் மரியா பெல்சியா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த செபா பாஸ்டின் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த வாடிப்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் சுதர்சன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மகிழ்ச்சியில் இருந்த இரு குடும்பத்தினரும் இந்த திடீர் விபத்தினால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.









