தமிழகத்தின் கிராமப்புற குடிநீர் விநியோகத்தில் குளறுபடிகள்: சிஏஜி தணிக்கை அறிக்கையில் பகீர் தகவல்

தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் 84% வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டாலும், போதிய அளவு நீர் கிடைப்பதில்லை என சிஏஜி தணிக்கையில் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், குடிநீர் விநியோகத்தில் பெரும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது 17.37 சதவீதமாக இருந்த வீட்டு குடிநீர் இணைப்பு வசதி, 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி 83.94 சதவீதமாக, அதாவது சுமார் 1.05 கோடி வீடுகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், புள்ளிவிவரங்கள் காட்டும் இந்த உயர்வு, பயனாளிகளுக்கு முழுமையான பயனைத் தரவில்லை என்பது சிஏஜி (CAG) அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு நபருக்கும் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் குடிநீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், தணிக்கை செய்யப்பட்ட வீடுகளில் பாதிக்கும் மேற்பட்டவற்றிற்கு இந்த அளவு தண்ணீர் கிடைப்பதில்லை என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட குடியிருப்புகள் எதிலும் இந்த அளவு தண்ணீர் வழங்கப்படவில்லை. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஆய்வு செய்யப்பட்ட இடங்களில் வெறும் 8.67 சதவீத குடியிருப்புகளுக்கு மட்டுமே போதிய அளவு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திட்ட விதிமுறைகளை மீறி, சுமார் 96 சதவீத குடிநீர் இணைப்புகள் வீடுகளுக்கு உள்ளே வழங்கப்படாமல், வெளியே வழங்கப்பட்டுள்ளது தணிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் திட்டமிடப்பட்ட 12 பணிகளில் 8 பணிகள் தொடங்குவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் உள்ள மூன்று திறந்தவெளி கிணறுகளில் எடுக்கப்பட்ட நீர் உப்புத்தன்மை கொண்டதாகவும், குடிப்பதற்கு தகுதியற்றதாகவும் இருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இத்தகைய செயல்பாடுகள் திட்டமிடலில் உள்ள குறைபாடுகளை வெளிகாட்டுகின்றன.
குடிநீர் தரம் மற்றும் கண்காணிப்பு பணிகளிலும் பல சிக்கல்கள் நிலவுகின்றன. கோயம்புத்தூர் மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் எடுக்கப்பட்ட 43 மாதிரிகளில் 7 மாதிரிகள் பிஐஎஸ் (BIS) தர நிர்ணயங்களை பூர்த்தி செய்யவில்லை. அதேபோல், இராமநாதபுரம், விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்ட ஆர்ஓ (RO) சுத்திகரிப்பு ஆலைகளில் 55 சதவீதம் செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிராம அளவிலான செயல் திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்பு அடிப்படை ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்பதும், ஆய்வு செய்யப்பட்ட ஆறு மாவட்டங்களிலும் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் அரசு நிர்வாகத்தின் மீதான விமர்சனங்களை வலுப்படுத்தியுள்ளது.









