தமிழகத்தின் இரண்டு பல்கலைக்கழகங்களில் கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைகேடு: சிஏஜி (CAG) அதிரடி அறிக்கை

தமிழகத்தில் உள்ள இரண்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு நடைபெற்றதாக சிஏஜி (CAG) தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள இரண்டு மத்திய பல்கலைக்கழகங்களில் நிதி மற்றும் நிர்வாக நடைமுறைகளில் கடும் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்திருப்பதை இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) தனது சமீபத்திய அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) மற்றும் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமிய நிறுவனம் (GRI) ஆகிய கல்வி நிறுவனங்களில் இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தணிக்கை அறிக்கையானது சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை, 2017-18 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில் 8.16 கோடி ரூபாய் மதிப்பிலான 44 கொள்முதல் மற்றும் பணி ஆணைகள் வழங்கப்பட்டதில் முறையான நிதி விதிகள் பின்பற்றப்படவில்லை என்று சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது. பல்கலைக்கழகத்தின் கட்டிடக் குழு அல்லது உரிய துறைகளின் ஒப்புதல் பெறாமலேயே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் போது அமைக்கப்பட வேண்டிய கொள்முதல் குழுக்கள் அமைக்கப்படவில்லை என்பதும், 2.50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ஒப்பந்தங்களுக்கு முறைப்படி டெண்டர் கோரப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் கொள்முதல் பிரிவுகளின் சரிபார்ப்பு இன்றி 8.16 கோடி ரூபாய்க்கான மசோதாக்கள் நேரடியாக மத்திய பொதுப்பணித் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் நடத்திய உள்நாட்டு விசாரணையில், கொள்முதல் செய்யப்பட்டதாகக் காட்டப்பட்ட 2,711 பொருட்களில் 786 பொருட்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும், 387 பொருட்களைச் சரிபார்க்க முடியவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. இதன் விளைவாக, 58.87 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் குறைவாக விநியோகம் செய்யப்பட்டதும், 2.01 கோடி ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிதி இழப்பு தொடர்பாக நான்கு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய கண்காணிப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், அந்தத் தொகையை வசூலிக்கும் பணி இன்னும் நிலுவையில் உள்ளது.
இதேபோன்று, திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிறுவனத்தின் மீதும் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன. கல்வி அமைச்சகம் அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) உரிய அனுமதியின்றி, 2017-ஆம் ஆண்டில் புது தில்லியில் ஒரு மையத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. காந்தியக் கொள்கைகள் மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்த பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்காக இந்த மையம் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ஐந்து ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கிய இந்த மையம் எவ்விதப் பயனுள்ள திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. இதற்காக சுமார் 3.20 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து, இந்த இழப்பை வசூலிக்குமாறு மத்திய அமைச்சகத்திற்கு சிஏஜி அறிவுறுத்தியுள்ளது.









