செங்கல்பட்டில் அதிர்ச்சி: சக மாணவரை ஏர்கன் துப்பாக்கியால் மிரட்டிய கல்லூரி மாணவர் கைது

செங்கல்பட்டில் சக மாணவரை ஏர்கன் துப்பாக்கியால் மிரட்டிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் தனது சக மாணவரை ஏர்கன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மாணவரைக் கைது செய்துள்ளனர். வேலூரைச் சேர்ந்த கமலகிருஷ்ணன் என்பவர், செங்கல்பட்டில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கமலகிருஷ்ணனின் சக மாணவரான ரித்துராஜ் ராய், தனது தோழி ஒருவரைப் பற்றி தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கமலகிருஷ்ணன், இந்த விவகாரம் குறித்துப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறி, செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரியில் வசிக்கும் ரித்துராஜ் ராயின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்றவுடன், ரித்துராஜ் வெளியே வராததால், ஆவேசமடைந்த கமலகிருஷ்ணன் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
வீட்டிற்குள் புகுந்த கமலகிருஷ்ணன், தான் மறைத்து வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து ரித்துராஜ் ராயை மிரட்டியுள்ளார். இதுமட்டுமின்றி, அங்கு இருந்த ரித்துராஜின் பெற்றோர்களையும் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல் துறையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கமலகிருஷ்ணனிடமிருந்த ஏர்கன் துப்பாக்கியைப் பறிமுதல் செய்தனர்.
காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சக மாணவர் தோழியைப் பற்றி ஏளனமாகப் பேசியதே இந்தத் தாக்குதல் முயற்சிக்குக் காரணம் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கமலகிருஷ்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சட்டவிரோதமாக ஆயுதம் ஏந்தி மிரட்டல் விடுத்தது மற்றும் அத்துமீறி நுழைந்ததற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









