சென்னை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் 4 புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகம்: முழு விவரங்கள்

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் நான்கு புதிய சமூகவியல் பட்டயப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் (Institute of Distance Education) வரவிருக்கும் 2027-28 ஆம் கல்வியாண்டு முதல் நான்கு புதிய சமூகவியல் சார்ந்த பட்டயப் படிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சமூகவியல் வாரியத்தின் பரிந்துரைகளை ஏற்று, பல்கலைக்கழக சிண்டிகேட் அமைப்பு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த புதிய படிப்புகள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் கல்வி மன்றம் மற்றும் செனட் சபையின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தொலைதூரக் கல்விப் பணியகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்த பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அறிமுகப்படுத்தப்படவுள்ள நான்கு படிப்புகளில், போட்டித் தேர்வுகளுக்கான சமூகவியல் பட்டயம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் குறித்த சமூகவியல் பட்டயம், குடும்பம், ஆரோக்கியம் மற்றும் ஆலோசனை தொடர்பான சமூகவியல் பட்டயம், மற்றும் திட்டமிடல் மற்றும் நிலையான மேம்பாடு குறித்த சமூகவியல் பட்டயம் ஆகியன அடங்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் சமூக தாக்கங்கள், குடும்ப நலன் மற்றும் நிலையான மேம்பாடு போன்ற சமகால சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சமூகவியல் பார்வையை வளர்க்கும் வகையில் தனித்துவமான பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு சந்தையின் இன்றையத் தேவைகளைக் கருத்தில் கொண்டு குறுகிய கால மற்றும் திறன் சார்ந்த படிப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தொலைதூரக் கல்வி நிறுவனம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு மிக முக்கியமான வருவாய் ஈட்டித் தரும் பிரிவாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்குப் பயின்று வரும் நிலையில், பல்கலைக்கழகத்திற்கு ஆண்டுக்கு 60 கோடி ரூபாய்க்கும் மேலாக வருவாய் கிடைக்கிறது. கல்வித் தரத்தை மேம்படுத்துவதோடு, மாணவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும் வகையில் இது போன்ற சிறப்புப் படிப்புகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.









