புழல் மத்திய சிறையில் கைதிகளின் வசதிகள் குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் ஆய்வு

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கான மருத்துவ வசதிகள், கல்வி மற்றும் தொழிற்பயிற்சி குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை புழல் மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள், கல்வி வாய்ப்புகள் மற்றும் அவர்கள் பெற்று வரும் தொழிற்பயிற்சிகள் குறித்து அவர் விரிவாகக் கேட்டறிந்தார். கைதிகள் தங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு சமூகத்தில் மறுவாழ்வு பெறுவதற்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அதிகரிக்கவும், உயர்கல்வியைத் தொடரத் தேவையான உதவிகளை வழங்கவும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனை, பார்வையாளர் கூடம், போதை மறுவாழ்வு மையம் மற்றும் மகாத்மா காந்தி சமூகக் கல்லூரி வகுப்பறைகள் ஆகியவற்றில் முதலமைச்சர் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து சிறை நூலகம், கணினி பயிற்சி மையம் மற்றும் அதிக பாதுகாப்பு மிகுந்த தொகுதி ஆகியவற்றையும் பார்வையிட்டார். சிறையில் உள்ள கைதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், அவர்களின் தேவைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். சிறை வளாகத்தில் இயங்கும் தொழிற்பயிற்சி பிரிவுகளுக்குச் சென்று கைதிகள் தயாரிக்கும் இரும்பு ரேக்குகள், காகித உறைகள் மற்றும் அலுவலக கோப்புகளைப் பார்வையிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார்.
கைதிகளுக்கான உணவு தயாரிக்கும் இடம், விசைத்தறி மற்றும் தையல் பிரிவுகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துகொண்டார். சிறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், கைதிகளின் மறுவாழ்விற்கான கூடுதல் திட்டங்களையும் செயல்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த ஆய்வுப்பணியின் போது கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, புழல் எம்3 காவல் நிலையத்திற்குச் சென்ற முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அங்குள்ள காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். காவல் ஆய்வாளருடன் கலந்துரையாடிய அவர், நிலையத்தின் அதிகாரப்பூர்வப் பதிவேடுகளைச் சரிபார்த்தார். காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் அறை, கணினி அறை மற்றும் கைதிகள் அடைக்கப்படும் சிறை அறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது காவல்துறை இயக்குநர் (சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள்) சந்தீப் ராய் ரத்தோர், சிறைத்துறை துணைத் தலைவர் டி. பழனி, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் மூத்த அதிகாரிகள் உடனிருந்தனர்.









