தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியன்களில் ஊழல்: அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பகிரங்க எச்சரிக்கை

தமிழ்நாடு சிறப்பு காவல் படை பட்டாலியன்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் நிலவும் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் குறித்து காவல்துறை தலைமையகம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சிறப்பு காவல் படை பட்டாலியன்களில் பணியாற்றும் காவலர்களுக்கு விடுப்பு வழங்குவதற்கு லஞ்சம் கோருதல், உணவுக் கூட நிதியில் முறைகேடு செய்தல் மற்றும் தலைமைக் காவலர்களை இடைத்தரகர்களாகப் பயன்படுத்தி லஞ்சம் வசூலித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து கூடுதல் காவல்துறை இயக்குநர் டாக்டர் ஆர். தினகரன் அனைத்து பட்டாலியன் தளபதிகளுக்கும் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
இந்தச் சுற்றறிக்கையில், சில பட்டாலியன்களில் நிர்வாகம் மிகவும் பொறுப்பற்ற முறையில் செயல்படுவது அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகப் பணிக்கு வராத காவலர்களுக்கு, அவர்கள் பணிக்கு வந்ததாகப் போலி ஆவணங்கள் தயாரிப்பது, வெளியூர்களில் இருந்துகொண்டு எழுத்தர்கள் மூலமாக நிர்வாகத்தை நடத்துவது போன்ற ஒழுங்கீனமான செயல்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, பொறுப்பில் இருக்கும் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு விடுப்பு வழங்குவதும், உணவுக் கூட நிர்வாகத்தில் முறைகேடுகளில் ஈடுபடுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 11-வது பட்டாலியனின் டி பிரிவில் நடைபெற்ற முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட டிஐஜி அளவிலான விசாரணையில், விடுப்பு வழங்க லஞ்சம் வசூலித்தது, போலி கையெழுத்துகள் இட்டது மற்றும் உணவுக் கூட செலவுகளுக்குப் போலி ரசீதுகளைத் தயாரித்தது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஏற்கனவே ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, மூன்று காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து பட்டாலியன் தளபதிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், அவ்வப்போது தணிக்கை செய்து ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடமையில் தவறும் அதிகாரிகள் மீது கடும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது இறுதி எச்சரிக்கை என்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவல்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் ஒழுக்கத்தையும் நிலைநாட்ட இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.









