இரண்டாவது பெண் குழந்தைக்கு பெற்றோரான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்

பிரபல பாலிவுட் நட்சத்திர இணையரான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
திரையுலகில் மிகவும் பிரபலமான தம்பதிகளான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் தங்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். குழந்தை பிறப்பு குறித்த அறிவிப்பு அடங்கிய அழகான சுவரொட்டி ஒன்றை அவர்கள் பதிவிட்டுள்ள நிலையில், அதில் 19 செப்டம்பர் 2026 என்ற தேதியுடன் துவா, தீபிகா மற்றும் ரன்வீர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளிவந்ததைத் தொடர்ந்து, திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபிகா மற்றும் ரன்வீர் சிங் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி துவா என்ற முதல் பெண் குழந்தை பிறந்தது. தற்போது தங்களின் இரண்டாவது குழந்தையை வரவேற்பதில் இந்த நட்சத்திர தம்பதி மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களின் இரண்டாவது கர்ப்ப செய்தியை அவர்கள் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பதிவில் மூத்த மகள் துவா, கர்ப்ப பரிசோதனை கருவியை வைத்திருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாகத் திகழும் தீபிகா மற்றும் ரன்வீர், ராம்-லீலா, பாஜிராவ் மஸ்தானி மற்றும் எய்ட்டி த்ரீ (83) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது திரைத்துறையில் தீவிரமாகப் பணியாற்றி வரும் ரன்வீர் சிங், சமீபத்தில் வெளியான துருந்தர் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து ஜெய் மேத்தா இயக்கத்தில் உருவாகும் பிரளய் என்ற சோம்பி மற்றும் சர்வைவல் திரில்லர் படத்தில் ரன்வீர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மறுபுறம், தீபிகா படுகோன் தற்போது சித்தார் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் கிங் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் மற்றும் சுஹானா கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். திரையுலகில் பிஸியான காலக்கட்டத்திலும், குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளைத் தவறாமல் பகிர்ந்து கொள்ளும் இந்த தம்பதியின் அறிவிப்பிற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. க்ரிதி சனோன் மற்றும் க்ரிதி கர்பந்தா உள்ளிட்ட சக கலைஞர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.









