ஊடக அங்கீகார அட்டை குழுவில் ச.விமலேஷ்வரனை நியமிக்க கோரிக்கை: தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல்

பத்திரிகையாளர் ச.விமலேஷ்வரனை ஊடக அங்கீகார அட்டை குழு உறுப்பினராக நியமிக்க அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் செய்தித்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கான நல வாரிய குழு, ஓய்வூதிய குழு மற்றும் ஊடக அங்கீகார அட்டை குழு (Press Accreditation Card Committee) ஆகியவற்றின் உறுப்பினர்கள் நியமனம் நடைபெற உள்ளது. இதில் ஊடக அங்கீகார அட்டை குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக பத்திரிகையாளர் ச.விமலேஷ்வரன் அவர்களை நியமிக்க பரிசீலிக்க வேண்டும் என்று 'தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலச்சங்கம்' சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநில தலைவர் K. அலி முகமது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் செய்தித்துறை இயக்குநர் ஆகியோருக்குக் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், பத்திரிகையாளர்களின் நலன் மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பத்திரிகையாளர் ச.விமலேஷ்வரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த அங்கீகார அட்டை தொடர்பான வழக்கில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வு காண முக்கிய பங்களிப்பு செய்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு பத்திரிகையாளர்கள் பயன்பெறும் வகையில், பத்திரிகையாளர்களின் கள நிலவரங்களையும், உண்மையான பிரச்சனைகளையும் அறிந்த ச.விமலேஷ்வரன் அவர்களுக்கு ஊடக அங்கீகார அட்டை குழுவில் வாய்ப்பளிப்பது, பத்திரிகையாளர் சமூகத்தின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அச்சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









