தனியார் பள்ளிகளுக்கு கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் கட்டணத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கல்வி கட்டணத்தை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசுக்கு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தனிநபர் செலவினக் கட்டணத்தை (Per Child Expenditure) திருத்தி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு (FePSA) தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு அளிக்கப்பட்ட மனுவில், கடந்த நான்கு கல்வி ஆண்டுகளுக்கான கட்டணம் ஒரே அரசாணையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022-23 முதல் 2025-26 வரையிலான காலக்கட்டத்தில், எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை தற்போதைய பொருளாதாரச் சூழலுக்குப் போதுமானதாக இல்லை என்று பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளின் பராமரிப்புச் செலவுகள், ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, அகவிலைப்படி, வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்பு, மின்சாரக் கட்டணம், குடிநீர் வசதி மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைக்கான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக சங்க நிர்வாகிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, 2026-27 கல்வி ஆண்டிற்கான தனிநபர் செலவினக் கட்டணத்தை உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு அரசு மேற்கொள்ளும் உண்மையான ஆண்டுச் செலவின் அடிப்படையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 2025-ஆம் ஆண்டு ஜூன் 3 ஆகிய தேதிகளில் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில், வருங்கால கல்வி ஆண்டுகளுக்கான கட்டணத்தை அரசு முறையாக மதிப்பாய்வு செய்து திருத்தம் செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கட்டண அடுக்குகளை மாற்றி, ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியான கட்டண விகிதங்களை நிர்ணயிக்க வேண்டும் என்றும், எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, 2025-26 கல்வி ஆண்டிற்கான கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள கட்டணத்தை ஒரு மாதத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்றும் பள்ளிகள் சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். வருங்காலங்களில் கல்வி கட்டணத்தை அந்தந்த கல்வி ஆண்டிற்குள்ளேயே இரண்டு தவணைகளாக வழங்கும் புதிய நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும், ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமைக்கும் இடையூறு ஏற்படாத வகையில், இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.









