dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழகத்தில் செப்டம்பர் 15 முதல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்: முதல்வர் அறிவிப்பு

By Admin
03/09/2026
58 views
தமிழகத்தில் செப்டம்பர் 15 முதல் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் செப்டம்பர் 15 முதல் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்யும் திட்டம் அமலுக்கு வருகிறது.

தமிழக போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கும் நடைமுறை மாற்றப்படவுள்ளது. இதற்குப் பதிலாக, வாகன உரிமையாளர்கள் மற்றும் உரிமம் பெற்றவர்கள் தாங்களாகவே மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்ட ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த புதிய முயற்சியின் மூலம் வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள முறையில் ஆவணங்கள் கிடைப்பதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) இடைத்தரகர்கள் மூலம் நடைபெறும் ஊழல்கள் முற்றிலும் தடுக்கப்படும். பல நேரங்களில் இடைத்தரகர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்களைத் தங்கள் வசம் வைத்துக்கொண்டு கூடுதல் பணம் வசூலிக்கும் புகார்கள் எழுந்து வந்த நிலையில், இந்த டிஜிட்டல் முறை அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவிறக்கம் செய்யப்படும் இந்த டிஜிட்டல் ஆவணங்களில் கியூ.ஆர் குறியீடுகள் மற்றும் டிஜிட்டல் கையொப்பங்கள் இடம்பெறும். போக்குவரத்து காவல்துறை மற்றும் பிற அமலாக்கத் துறை அதிகாரிகள் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்தி இந்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை எளிதாகச் சரிபார்க்க முடியும். தற்போது சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளுக்காக வாகன உரிமையாளர்களிடம் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு, வாகனங்களை வாங்கும் அன்றைய தினமே உரிமையாளர்கள் பதிவுச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அதேபோல, ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அன்றே உரிமத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்படுகின்றன, இதில் 20 லட்சம் வாகனப் பதிவுச் சான்றிதழ்களும், 9 லட்சம் ஓட்டுநர் உரிமங்களும் அடங்கும். இனிவரும் காலங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் நகல்களை விரும்பினால், வாகன உரிமையாளர்கள் தங்கள் சொந்த செலவில் அவற்றை பிளாஸ்டிக் கார்டுகளாக மாற்றிக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆவணங்கள் சட்டப்பூர்வமானவை என்பதால் காவல்துறை சோதனையின் போது அவற்றைப் பயன்படுத்த எந்தத் தடையும் இருக்காது. மேலும், தொழில்நுட்பக் கோளாறுகளால் ஏற்படும் நிர்வாகச் சுமையை குறைக்கவும், விண்ணப்பதாரர்கள் நீண்ட காலம் காத்திருப்பதைத் தவிர்க்கவும் இந்த டிஜிட்டல் மாற்றம் பெரிதும் உதவும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழக அரசு
#ஓட்டுநர் உரிமம்
#போக்குவரத்து துறை
#டிஜிட்டல் இந்தியா
#செய்திகள்
#TamilNaduGovt
#DrivingLicence
#DigitalTamilNadu
#TransportDepartment
#TamilNaduNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications