dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தமிழகத்தில் வறட்சி அச்சம்: 90 அணைகளில் நீர் இருப்பு 37 சதவீதமாக சரிவு

By Admin
17/08/2026
65 views
தமிழகத்தில் வறட்சி அச்சம்: 90 அணைகளில் நீர் இருப்பு 37 சதவீதமாக சரிவு

தமிழகத்தில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் மாநிலத்தின் 90 அணைகளில் நீர் இருப்பு வெறும் 37 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததாலும், ஆகஸ்ட் மாதத்திலும் கோடை காலத்தைப் போன்ற வெப்பம் நீடிப்பதாலும் மாநிலத்தின் நீர் ஆதாரங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. நீர்வளத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் உள்ள 90 முக்கிய அணைகளின் மொத்தக் கொள்ளளவு 224.343 டிஎம்சி ஆகும். இதில் தற்போது வெறும் 83.124 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 37.05 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர் இருப்பு 189.545 டிஎம்சி ஆக, அதாவது தற்போது இருப்பதை விட 47 சதவீதம் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அணைகளின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. 90 அணைகளில் 58 அணைகள் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர் இருப்பையே கொண்டுள்ளன. 14 அணைகளில் 26 முதல் 50 சதவீதம் வரையிலும், 15 அணைகளில் 51 முதல் 76 சதவீதம் வரையிலும் தண்ணீர் உள்ளது. 80 சதவீதத்திற்கும் மேல் நீர் இருப்பு கொண்ட அணைகள் இரண்டே இரண்டு மட்டுமே. தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை மட்டுமே தனது முழு கொள்ளளவான 18.43 மில்லியன் கனஅடியை எட்டியுள்ளது. மற்ற அணைகள் அனைத்தும் மிகக் குறைந்த நீர் மட்டத்தையே கொண்டுள்ளன.

வேளாண்மைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 46.30 சதவீதமாக, அதாவது 43.275 டிஎம்சியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் மேட்டூர் அணையில் 97.48 சதவீதம் (91.114 டிஎம்சி) நீர் இருந்தது. கர்நாடகாவில் உள்ள காவிரி ஆற்றுப் பாசன அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி மற்றும் ஹேமாவதி ஆகிய அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்தாலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட வேண்டிய நீரை கர்நாடகா முறையாகத் திறந்து விடவில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கப்பட வேண்டிய நீரையும் விட மிகக் குறைந்த அளவே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

தற்போதைய சூழலில் குடிநீர் தேவை ஓரளவு சமாளிக்கப்பட்டு வந்தாலும், அணைகளைச் சார்ந்திருக்கும் பகுதிகளில் விவசாயப் பணிகளுக்கும், குடிநீர் விநியோகத்திற்கும் நீர் மேலாண்மை செய்வது கடும் சவாலாக மாறியுள்ளது. பவானிசாகர், அமராவதி மற்றும் வைகை போன்ற முக்கிய பாசன அணைகளும் போதிய நீர் வரத்தின்றி காணப்படுகின்றன. இதனால், வரும் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையையே தமிழகம் முழுமையாக நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே அணைகளின் நீர்மட்டத்தை ஓரளவாவது உயர்த்த முடியும் என நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழகம்
#அணைகள்
#நீர்நிலை
#வறட்சி
#மழைப்பொழிவு
#TamilNadu
#Reservoirs
#Drought
#WaterLevel
#Rainfall
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications