dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர் அருகே சொத்துத் தகராறு: மகனின் கோரச் செயலில் தந்தை நசுங்கிப் பலி

By Admin
19/08/2026
70 views
ஸ்ரீபெரும்புதூர் அருகே சொத்துத் தகராறு: மகனின் கோரச் செயலில் தந்தை நசுங்கிப் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே சொத்துத் தகராறில் தம்பியை வாகனத்தால் ஏற்ற முயன்றபோது தந்தை மீது மோதி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மன்னுார் ஊராட்சி பகுதியில் அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சொத்துத் தகராறு காரணமாகத் தனது தம்பியை மினி லாரியால் ஏற்றிக் கொல்ல முயன்ற ஒரு நபர், தற்செயலாகத் குறுக்கே வந்த தனது தந்தையையே வாகனத்தால் மோதிக் கொன்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் சத்யா என்ற 50 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தனது மனைவி நாகம்மாள் மற்றும் மூன்று மகன்கள், ஒரு மகள் ஆகியோருடன் வசித்து வந்தார்.

காவல்துறை விசாரணையில், சத்யாவின் இரண்டாவது மகனான 25 வயதுடைய முனுசாமி, கடந்த சில மாதங்களாகவே தனது தந்தையிடம் தனக்குச் சொந்தமாக நிலம் வழங்க வேண்டும் அல்லது நிலம் வாங்குவதற்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகராறு நீடித்து வந்தது. இந்த விவகாரம் தொடர்பாகச் செவ்வாய்க்கிழமை அன்று முனுசாமி மினி லாரியில் வந்து தனது தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு வந்த இளைய மகன் சதீஷ் இதைக் கண்டித்ததால், சகோதரர்கள் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்ததாகக் கூறப்படும் முனுசாமி, ஆத்திரமடைந்து தான் கொண்டு வந்திருந்த மினி லாரியைத் தனது தம்பி சதீஷை நோக்கி வேகமாகச் செலுத்தினார். இந்த ஆபத்தான சூழலைக் கண்ட தந்தை சத்யா, தனது இளைய மகனைக் காப்பாற்றுவதற்காக ஓடிச் சென்று அவனைத் தள்ளிவிட முயன்றார். எதிர்பாராத விதமாக வாகனம் தந்தை சத்யா மீது பலமாக மோதியது.

இந்த கோர விபத்தில் தந்தை சத்யா வாகனத்தின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். சுமார் 300 மீட்டர் தூரம் வரை தந்தை சிக்கியிருந்த நிலையிலேயே வாகனத்தை முனுசாமி ஓட்டிச் சென்றுள்ளார். வாகனத்தை நிறுத்திவிட்டுத் தந்தை உயிரிழந்ததை உறுதி செய்தவுடன், முனுசாமி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முனுசாமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒரு குடும்பத்தின் சொத்து மோகம் தந்தையின் உயிரையே பலி வாங்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#ஸ்ரீபெரும்புதூர்
#சொத்துத்தகராறு
#கொலைச்சம்பவம்
#காவல்துறை
#தமிழகசெய்திகள்
#Sriperumbudur
#PropertyDispute
#CrimeNews
#TamilNaduPolice
#TragicIncident
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications