கோவை அருகே கொடூரம்: நோய் பாதித்த மகளை கொன்றுவிட்டு தந்தை மற்றும் மகன் தற்கொலை முயற்சி

கோவை அருகே மகளை கொன்றுவிட்டு தந்தை மற்றும் மகன் தற்கொலைக்கு முயன்ற சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவை புறநகர் பகுதியான பேரூர் அருகே உள்ள ஆறுமுகக்கவுண்டனூரில் மிகவும் துயரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஸ்ரீ வாணி கார்டன் பகுதியில் வசித்து வரும் பாலக்கிருஷ்ணன் (54) என்பவர் தனது மகள் ஹரிதா (15) மற்றும் மகன் ரித்தீஷ் (17) ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஹரிதாவுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதன் காரணமாக அவர் கோமா நிலைக்குச் சென்றார். இந்தச் சூழலில், தனது மகளை முழுநேரமாகக் கவனித்துக்கொள்வதற்காகப் பத்திரிகைப் பணியிலிருந்த பாலக்கிருஷ்ணன் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
பாலக்கிருஷ்ணனின் மனைவி போர்ச்செல்வி, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் வழக்கம் போலப் பணிக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் பாலக்கிருஷ்ணன், ரித்தீஷ் மற்றும் ஹரிதா ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது, பாலக்கிருஷ்ணன் தனது அக்கம் பக்கத்தில் வசிப்பவரான நடராஜ் என்பவருக்குத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, தாங்கள் தற்கொலை செய்யப்போவதாகத் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த நடராஜ் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.
நடராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மூவரும் ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்து உடனடியாக அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஹரிதா பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிதா ஏற்கனவே உடல்நலக் குறைவால் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய சூழல் குடும்பத்தினரை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலக்கிருஷ்ணன் மற்றும் ரித்தீஷ் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்துத் தகவலறிந்த பேரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன அழுத்தத்தினால் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவர்கள், அரசு வழிகாட்டுதலின்படி 104 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.









