சென்னை: சிறுமிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் ஜெம் குழும தலைவர் ஆர்.வீரமணி அதிரடி கைது

சென்னை தேனாம்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஜெம் குழும தலைவர் ஆர்.வீரமணி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரான 85 வயதுடைய ஆர்.வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு காவல்துறைக்குக் கிடைத்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவின் மனித கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வழங்கிய யுஎஸ்பி (USB) டிரைவில் சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, மனித கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததோடு, அதில் இருப்பவர் ஜெம் குழுமத் தலைவர் ஆர்.வீரமணி என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காவல்துறையின் விசாரணையில், ஆர்.வீரமணி தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அந்த வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பில் சாந்தி (60) மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் (63) ஆகியோர் இருந்துள்ளனர். இந்தத் தம்பதியினர், வீட்டின் செயல்பாடுகளைக் கவனிப்பதோடு மட்டுமல்லாமல், ஆர்.வீரமணி சிறுமிகளை அந்த இடத்திற்கு அழைத்து வந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதற்கும், அந்த குற்றங்களை மறைப்பதற்கும் உறுதுணையாக இருந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பான ஆதாரங்கள் மற்றும் பிற சிறுமிகள், பெண்களின் புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தற்போதைய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.









