கரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி கொத்தனாரை அரிவாளால் வெட்டிய பாட்டி - பரபரப்பு சம்பவம்

கரூர் மாவட்டம் குளித்தலையில் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் கொத்தனாரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முப்பது வயதான கொத்தனார் ஒருவரை, அந்த சிறுமியின் பாட்டி அரிவாளால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குளித்தலை சுங்கச்சாவடி அருகே உள்ள தேநீர் கடை ஒன்றின் அருகில் இந்த தாக்குதல் சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் நிகழ்ந்துள்ளது. குண்டங்கல்பாறை பகுதியைச் சேர்ந்த அந்த கொத்தனார், சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த பின்னணியில், அந்தச் சிறுமியின் தாயார் தனது மகளை, தூரத்து உறவினரான இந்த கொத்தனாரிடம் கொடுத்து, குளித்தலை அருகே வசிக்கும் பாட்டியின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அந்த நபர் சிறுமியை பாட்டியின் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின்னர், குழந்தையை பாட்டியின் வீட்டிற்கு அருகில் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றார். நடந்த கொடுமையைச் சிறுமி தனது பாட்டியிடம் அழுதபடி கூற, அதிர்ச்சியடைந்த அவர் அந்த நபரைக் கண்டுபிடிக்க தேடுதலில் ஈடுபட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மதியம், அந்த நபர் குளித்தலை பகுதியில் இருப்பதை அறிந்த சிறுமியின் 55 வயது பாட்டி, ஆத்திரமடைந்து அரிவாளுடன் நேரில் சென்றுள்ளார். அவரைப் பார்த்ததும் அந்த நபர் தப்பிக்க முயல, விடாமல் துரத்திச் சென்று பாட்டி அவரை வெட்டியுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்களும் ஆவேசமடைந்து அந்த நபரைத் தாக்கியுள்ளனர். இதில் அந்த நபருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளித்தலை காவல் துறையினர், காயமடைந்த நபரை மீட்டு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு பத்து இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் கூறுகையில், சிறுமி மீதான பாலியல் துன்புறுத்தல் புகார் மற்றும் பாட்டி தாக்குதல் நடத்தியது ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்தும் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். தற்போது வரை இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்றும், முழுமையான விசாரணைக்குப் பிறகே உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுமியின் பாட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.









