ஜப்பானில் வேலைவாய்ப்பு: தமிழக ஐடிஐ மாணவர்களுக்கு புதிய கதவுகளைத் திறந்த தமிழக அரசு

ஜப்பானில் உள்ள எஹிமே-நிசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற தமிழக ஐடிஐ மாணவர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழக அரசு, தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிலும் மாணவர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில், ஜப்பானின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான எஹிமே-நிசான் (Ehime-Nissan) நிறுவனத்துடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ நிகழ்வு, சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெ. முகமது ஃபர்வாஸ் முன்னிலையில் நடைபெற்றது. இதற்கான ஒப்பந்தத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) மற்றும் ஜப்பானிய நிறுவனமான எஹிமே-நிசான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டனர்.
இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வாகனங்கள் சார்ந்த பிரிவுகளில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகும். இதற்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஜப்பான் செல்லும் முன், ஆறு மாத கால தீவிர ஜப்பானிய மொழிப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சிகள் முடிவடைந்த பிறகு, அவர்கள் ஜப்பானில் உள்ள எஹிமே-நிசான் நிறுவனத்தில் வாகன சேவை தொழில்நுட்ப வல்லுநர்களாக (Automobile Service Technicians) பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாக, மாணவர்கள் ஜப்பான் செல்லும் வரையிலான ஜப்பானிய மொழிப் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் பயணச் செலவுகள் அனைத்தையும் எஹிமே-நிசான் நிறுவனமே முழுமையாக ஏற்றுக்கொள்ளும். மாணவர்கள் ஜப்பான் சென்றடைந்த பிறகு, தேவையான கூடுதல் மொழிப் பயிற்சி, ஆவணங்கள் தயாரித்தல், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் விசா கட்டணங்கள் போன்ற செலவுகளை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற முயற்சிகள் தமிழக இளைஞர்களின் பன்னாட்டு வேலைவாய்ப்பு கனவை நனவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தற்போது 132 அரசு ஐடிஐ மற்றும் 277 தனியார் ஐடிஐ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பிட்டர், எலக்ட்ரீஷியன், வெல்டர், ஏசி மெக்கானிக் மற்றும் கணினி ஆபரேட்டர் போன்ற பாரம்பரிய பயிற்சிகளுடன், நவீன தொழில்நுட்பங்களான மேம்பட்ட சிஎன்சி (Advanced CNC), ரோபாட்டிக்ஸ் மற்றும் மின்சார வாகனங்கள் (Electric Vehicles) தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 2026-ஆம் கல்வியாண்டில் அரசு ஐடிஐ-களில் சுமார் 80 சதவீத இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளதாகவும், நேரடி சேர்க்கை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பயிற்சி முடித்த மாணவர்களில் 95 சதவீதத்தினர் இந்தியாவிலுள்ள முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.









