காஞ்சிபுரம்: கொத்தடிமைச் சூழலில் கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு - உரிமையாளர் மீது பாய்ந்தது வழக்கு

காஞ்சிபுரத்தில் இருளர் இன கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது பச்சிளம் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், உரிமையாளர் மீது கொத்தடிமை முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளைகேட் பகுதியில் இருளர் இனத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்பொழி (44) என்ற கர்ப்பிணிப் பெண், பிரசவ வலியின் போது தார்ப்பாய் வேயப்பட்ட ஒரு தற்காலிகக் குடிசையில் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தார். பாதி பிறந்த நிலையில் குழந்தையும் அதே இடத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் ஆனந்த் (45) அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மரம் வெட்டும் தொழிலுக்காக அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே ஆறுமுகன் என்பவரிடம் 20,000 ரூபாய் முன்பணம் பெற்று வேலை செய்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த முன்பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்காகவே, உரிமையாளர் அமைத்துக் கொடுத்த குடிசையில் தங்கி குடும்பத்தினர் வேலை செய்து வந்துள்ளனர். தங்களை கொத்தடிமைகளாகவே உரிமையாளர் வைத்திருந்ததாகவும், தனது மனைவிக்கு அரிசி வாங்க பணம் கேட்டபோது ஆறுமுகம் தன்னைத் தாக்கியதாகவும் ஆனந்த் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணிப் பெண் தென்பொழிக்கு வயிற்று வலி ஏற்பட்டபோது, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு பலமுறை கேட்டும் உரிமையாளர் ஆறுமுகம் மறுத்துவிட்டதாக ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி மறுத்ததோடு மட்டுமல்லாமல், வலி நிவாரணி மாத்திரைகளை மட்டும் உட்கொள்ளுமாறு கூறி அவரை அலட்சியப்படுத்தியதாகத் தெரியவருகிறது. இந்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3(1)(h) மற்றும் கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் ஆறுமுகம் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது இந்தச் சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் (RDO) தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத்தினருக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் தடுத்தாரா என்பது குறித்தும், இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், முறையான பிரசவ ஏற்பாடுகளைச் செய்யத் தவறியதற்காக ஆனந்த் மற்றும் அவரது தாயார் மீதும் குற்றவியல் அலட்சியம் தொடர்பான சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.









