காஞ்சிபுரம் தனியார் கல்லூரி விடுதியில் இளம்பெண் சடலமாக மீட்பு: பின்னணியில் காதல் விவகாரம்?

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மூன்றாம் ஆண்டு மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மூன்றாம் ஆண்டு மின் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் (ECE) மாணவி, தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த நிகிதா (19) என்பவரே உயிரிழந்த மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது தந்தை திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பணியாற்றி வருகிறார், தாய் இல்லத்தரசி ஆவார். நிகிதா விடுதியின் தனி அறையில் தங்கி பயின்று வந்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக மாணவி தனது அறையை விட்டு வெளியே வராதது விடுதி நிர்வாகத்திற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, விடுதி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துயரச் சம்பவத்தை அடுத்து, கல்லூரி வளாகத்தில் சக மாணவர்கள் திரண்டு வந்து உரிய விசாரணை நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்ட பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆரம்பகட்ட விசாரணையில், மாணவி தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் காதலில் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாக அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தமிழக அரசின் 104 உதவி எண்ணையோ அல்லது சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் 044-24640050 என்ற எண்ணையோ தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம்.









