dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

கான்சாபுரம் சாதிய மோதல்கள்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

By Admin
08/09/2026
41 views
கான்சாபுரம் சாதிய மோதல்கள்: அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் கிராமத்தில் சாதிய மோதல்களைத் தடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், கான்சாபுரம் கிராமத்தில் சாதிய ரீதியிலான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது குறித்து தமிழக அரசு மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உரிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பெரியசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கான்சாபுரம் கிராமத்தில் சுமார் 350 தேவேந்திரகுல வேளாளர் சமூகக் குடும்பங்களும், 2,300 ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் இல்லங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளின் போது, சீர் வரிசைகளை பொதுப் பாதையில் மேளதாளங்களுடன் எடுத்துச் செல்வதையும், பட்டாசு வெடிப்பதையும் ஆதிக்க சமூகத்தினர் எதிர்ப்பதாகவும், இதனால் அடிக்கடி சாதிய ரீதியான அவமானங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக நேரிடுவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மனுதாரரின் தகவல்படி, கடந்த ஜூன் மாதம் தனது உறவினரின் காதணி விழாவிற்காகச் சீர் வரிசை எடுத்துச் சென்றபோது, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆதிக்க சமூகத்தினரால் மிரட்டப்பட்டதை அடுத்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்வதாகக் கூறப்படும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மக்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டதோடு, அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் பாரபட்சமாகச் செயல்படுவதாக மனுதாரர் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் அவர்களைப் பங்கேற்க அனுமதித்ததோடு, பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தனது மனுவில் பெரியசாமி சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலத்தில் இத்தகைய மோதல்களைத் தடுக்கக் கான்சாபுரம் பகுதியில் தற்காலிகக் காவல் சாவடி அமைக்க வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் பொதுப் பாதையைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#சென்னைஉயர்நீதிமன்றம்
#விருதுநகர்
#கான்சாபுரம்
#சாதியமோதல்
#தமிழகசெய்திகள்
#MadrasHighCourt
#Virudhunagar
#Kansapuram
#CasteViolence
#TamilNaduNews
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications