தமிழ்நாடு: முதுகலை ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து விடுவிக்க கோரி வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான முதுகலை ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து விடுவிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து, இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வி. மணிவாசகம் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆகஸ்ட் மாதம் என்பது நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்கு மிக முக்கியமான காலமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அனுப்புவது மாணவர்களின் கல்வி நலனைப் பாதிக்கும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகளுக்குப் பதிலாக, கல்வித்துறை சாரா பணியாளர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தலாம் என்று அந்தச் சங்கம் மாற்று ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாக சங்கத்தின் சார்பில் உரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா என்று கேள்வி எழுப்பியது. சங்கத்தின் தரப்பில் தீர்மானம் நிறைவேற்றப்படாதது உறுதி செய்யப்பட்ட நிலையில், உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் தங்கள் பதிலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முதுகலை ஆசிரியர்களைக் கணக்கெடுப்பு பணிக்கு நியமிப்பது தொடர்பான கொள்கை முடிவைச் சமர்ப்பிக்குமாறு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கிளையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்களை இந்த வழக்கில் தானாக முன்வந்து இணைத்துள்ள நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்களைப் பெற்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.









