dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடு

தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து: எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

By Admin
23/08/2026
71 views
தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்து: எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் புத்தகத்தில் வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தை பெரியார் குறித்து அவதூறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட சிவில் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் என்ற அடிப்படையில் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில் பெரியார் குறித்து அவதூறாக எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிட்டதற்காக ரூ. 1 கோடியே ஆயிரத்து ஒரு ரூபாய் நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கே. கோவிந்தராஜன் திலகவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்வாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கௌதம் ஆர். தேசிராஜு, டெல்லியைச் சேர்ந்த எழுத்தாளர் தீட்சித் பட்டாச்சார்யா மற்றும் நொய்டாவைச் சேர்ந்த ப்ளூஒன் இங்க் பிரைவேட் லிமிடெட் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்கள் செப்டம்பர் 9-ஆம் தேதிக்குள் தங்களது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவல்களின்படி, 'டெலிமிட்டேஷன் அண்ட் ஸ்டேட்ஸ் ரீஆர்கனைசேஷன் ஃபார் எ பெட்டர் டெமோக்ரசி இன் பாரத்' என்ற புத்தகத்தில், பெரியார் குறித்து தவறான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பெரியார் பிராமணர்களைக் கொல்வதற்கு அழைப்பு விடுத்ததாக அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் பொய்யானது என்றும், இது வரலாற்று உண்மைகளைத் திரிக்கும் செயல் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, 1973-ல் காரைக்குடியில் பெரியார் பேசியதாகக் கூறி, அந்தப் புத்தகம் தவறான மேற்கோள்களைப் பயன்படுத்தியுள்ளது.

பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் வன்முறையை ஒருபோதும் ஆதரித்ததில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள கி. வீரமணி, இந்த அவதூறான கருத்துகள் வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது பதிப்புரிமைச் சட்டம் 1957-ன் கீழ் தார்மீக உரிமைகளை மீறும் செயல் என்றும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் வரலாற்றைத் தவறாகச் சித்தரிக்கும் முயற்சி என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது சட்ட வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#பெரியார்
#சென்னைஉயர்நீதிமன்றம்
#கிவீரமணி
#திராவிடர்கழகம்
#அவதூறுவழக்கு
#Periyar
#MadrasHighCourt
#KVeeramani
#DefamationCase
#DravidarKazhagam
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications