தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் கீழ், தங்க மோதிரங்களை தயாரித்தல், ஹால்மார்க் முத்திரை பதித்தல் மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது தொடர்பான பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஜோயாலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை மாநகரைச் சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் ஜி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய முதல் அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது. சுமார் 4,41,667 ஒரு கிராம் தங்க மோதிரங்களுக்கு, ஒரு மோதிரத்திற்கு வெறும் ஒரு பைசா மட்டுமே கூலியாக நிர்ணயிக்கப்பட்டது அநியாயமானது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இது வணிக ரீதியாக சாத்தியமில்லாத ஒரு ஊக டெண்டர் (Speculative Tender) என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் டி. மோகன் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில், தமிழ்நாடு டெண்டர் வெளிப்படைத்தன்மை விதிகள் சட்டத்தின் 29-ஏ பிரிவின் கீழ், இந்தத் தொகை மிகக் குறைவானது என்று சுட்டிக்காட்டப்பட்டது. தனியார் நிறுவனங்கள் லாப நோக்கமின்றி செயல்பட வாய்ப்பில்லை என்றும், இது பொதுமக்களின் நலனைக் காட்டிலும் வணிக ரீதியாக சந்தேகத்திற்குரிய வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்கம் மற்றும் நகை வர்த்தகம் தொடர்பான இந்த டெண்டரை மதிப்பிடும் குழுவில், மருந்து மற்றும் உபகரணங்களை மதிப்பீடு செய்யும் குழுவினர் இடம்பெற்றிருந்தது முறையற்றது என்றும் வாதம் செய்யப்பட்டது.
நீதிமன்றம் இந்த வாதங்களை விரிவாகப் பரிசீலித்த நிலையில், அரசின் இந்த டெண்டர் நடைமுறைக்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல மனுவில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று கருதி அதனைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதன் மூலம், தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் தங்க மோதிரங்களை விநியோகம் செய்வதில் இருந்த சட்டச் சிக்கல்கள் நீங்கியுள்ளன. இந்த வழக்கு நீதித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட நிலையில், அரசின் டெண்டர் செயல்முறைக்கு ஆதரவாக இந்த உத்தரவு அமைந்துள்ளது.









