சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டு: உயர் நீதிமன்றம் முக்கிய கருத்து

சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவது அமைச்சர்களின் செயல்பாட்டைப் பாதிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் அமைச்சர்கள் குறித்து ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற முறையில் குற்றச்சாட்டுகளைப் பரப்புவது, அவர்களின் பணிகளைப் பாதிப்பதோடு பொதுநலனுக்கும் எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் குறித்து பழனி கோயில் நிலப் பதிவு விவகாரத்தில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்ட வினோத் சூர்ய குமார் என்பவருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்து நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வினோத் சூர்ய குமார், தனது பதிவுகள் தவறானவை என்பதை ஒப்புக்கொண்டு, வருத்தம் தெரிவிப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எதிர்காலத்தில் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடும் முன் உண்மைகளைச் சரிபார்ப்பதாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சரின் தனி உதவியாளர் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் செல் காவல்துறையினர் இந்த வழக்கைப்பதிவு செய்திருந்தனர். சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்பி, பொது அமைதியைக் குலைக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
நீதிமன்ற விசாரணையின் போது, பழனி கோயில் நிலம் தொடர்பான சர்ச்சை தற்போதைய அரசு பொறுப்பேற்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பிட்ட நிலத்தை ஒரு தனியார் நபர் தனது கட்டுப்பாட்டில் உள்ளதாகக் கூறி பதிவு செய்ய நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்தாலும், மேல்முறையீட்டில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்தச் சொத்து பரிமாற்ற விவகாரத்தில் அமைச்சர் எஸ். ரமேஷுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதும், அவர் பொறுப்பில் இல்லாதபோதே இவை நடந்ததும் தெளிவுபடுத்தப்பட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை மனுதாரரின் வழக்கறிஞரே ஒப்புக்கொண்டார்.
தனிநபர் மீதான அரசியல் விமர்சனங்களுக்கு கருத்து சுதந்திரத்தில் இடம் இருந்தாலும், அவதூறான கருத்துகளை முன்வைப்பது ஏற்புடையதல்ல என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். இருப்பினும், இந்த வழக்கில் வன்முறையைத் தூண்டுதல் அல்லது மதக் கலவரத்தை உருவாக்கும் உள்நோக்கம் இல்லை என்பதால் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது. அதேநேரம், அமைச்சர் விரும்பினால் இந்த விவகாரம் தொடர்பாக சிவில் அல்லது கிரிமினல் அவதூறு வழக்குகளைத் தொடர அவருக்கு முழு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.









