மதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் எரித்துக் கொலை: 3 குற்றவாளிகளுக்கு தலா 8 ஆயுள் தண்டனை

மதுரை அருகே 7 பேரை எரித்துக் கொன்ற வழக்கில் 3 பேருக்கு தலா 8 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மாவட்டம் செக்காபட்டி அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் வீட்டின் உள்ளேயே வைத்து தீயிட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி உதயவேலவன், குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து, அவர்களுக்கு தலா எட்டு ஆயுள் தண்டனைகள் மற்றும் அபராதத் தொகையை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்கள் கண்ணனின் மனைவியான பண்டீஸ்வரி, தங்கவேலுவின் மனைவி முருகேஸ்வரி மற்றும் முருகேஸ்வரியின் மகனான ராஜபாண்டி ஆகியோர் ஆவர். கண்ணனுக்கும் பண்டீஸ்வரிக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த திருமணப் பிரச்சனை மற்றும் குடும்பத் தகராறே இந்த கோரமான சம்பவத்திற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. திருமணப் பிரச்சனை தொடர்பாக இரு குடும்பத்தினரும் ஊராட்சி மன்றத் தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலையைத் திட்டமிட்டு அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி அதிகாலை நேரத்தில், தூங்கிக் கொண்டிருந்த கண்ணனின் குடும்பத்தினரை வீட்டின் உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு, வெளியே இருந்து எரிபொருளை ஊற்றித் தீ வைத்துள்ளனர். இந்த கோர விபத்தில் வேலூ (60), அவரது மனைவி பேச்சியம்மாள் (55), மகன் கண்ணன் (25), சுகன்யா (35), சங்கீதா (17), சஞ்சித் (12) மற்றும் வினித் (10) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக செக்காபட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி மூவரையும் கைது செய்தனர்.
மதுரை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, குற்றவாளிகள் மூவருக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சதித் திட்டம் தீட்டியதற்காகவும், வீட்டிற்குத் தீ வைத்ததற்காகவும் சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதமும், ஏழு பேரை கொலை செய்த குற்றத்திற்காக தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் எட்டு ஆயுள் தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. துல்லியமான ஆதாரங்களைச் சேகரித்து புலன் விசாரணை செய்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோமதி மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை ஏற்று, நீதிபதி இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளார். தற்போது இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குக் கிடைத்த நீதியாகக் கருதப்படுகிறது.









