மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்: பத்து ஆண்டுகளாக உயர்த்தப்படாத விடைத்தாள் மதிப்பீட்டு ஊதியம் - பேராசிரியர்கள் கோரிக்கை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2015-ம் ஆண்டு முதல் விடைத்தாள் மதிப்பீட்டு ஊதியம் உயர்த்தப்படாததால் பேராசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் விடைத்தாள் மதிப்பீட்டு ஊதியம், கடந்த 2015-ம் ஆண்டு முதல் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருப்பது ஆசிரியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகம் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை முன்கூட்டியே வசூலித்தாலும், விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் பேராசிரியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் தாள்களை மதிப்பீடு செய்யும் பணியில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் கௌரவ விரிவுரையாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஊதிய விகிதத்தின்படி, இளங்கலை படிப்பு விடைத்தாள்களுக்கு தலா 12 ரூபாயும், முதுகலை படிப்பு விடைத்தாள்களுக்கு தலா 13 ரூபாயும் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனுடன், உள்ளூர் பேராசிரியர்களுக்கு 150 ரூபாயும், வெளியூர் பேராசிரியர்களுக்கு 250 ரூபாயும் பயணப்படியாக வழங்கப்படுகிறது. அதேபோல், தேர்வு கண்காணிப்பு பணிக்கு ஒரு தேர்வுக்கு 100 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், கடந்த பத்தாண்டுகளாக இந்த ஊதியம் மாறாமல் இருப்பது நியாயமற்றது என்று பேராசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை சுமார் 10 சதவீதம் வரை உயர்த்தி வரும் நிலையில், பேராசிரியர்களுக்கான ஊதியத்தை மட்டும் உயர்த்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி மற்றும் என்.டி.ஏ போன்ற அமைப்புகள் தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு 1,000 ரூபாய்க்கும் மேல் வழங்கும் நிலையில், பல்கலைக்கழகம் மிகவும் குறைந்த தொகையையே வழங்கி வருகிறது. மேலும், கடந்த நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பல்வேறு தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்ததற்கான ஊதியமும் இன்னும் பல பேராசிரியர்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், விடைத்தாள் மதிப்பீட்டு ஊதியத்தை உயர்த்துவது தொடர்பான கோப்பு பல்கலைக்கழகத்தின் நிதிக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மற்ற பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ள ஊதிய விகிதத்திற்கு ஏற்ப, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் விரைவில் ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார். நிலுவையில் உள்ள ஊதியத் தொகைகளை பேராசிரியர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









