மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில அபகரிப்பு வழக்கு: 15 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நில மோசடி வழக்கில் 15 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மோசடி செய்து அபகரிக்க முயன்ற விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட 15 பேரின் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரைராஜா துரைராணி அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.79 ஏக்கர் நிலம், 1930-ஆம் ஆண்டு சமய மற்றும் அறக்கட்டளைப் பணிகளுக்காகக் கோயிலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இந்த முக்கியத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
வழக்கின் விவரப்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த நிலம் வி.ராமாயி அய்யர் உள்ளிட்ட ஒன்பது பேரின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் ஆட்சேபனைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தப் பதிவு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இந்த உண்மையை மறைத்து, 2021-ஆம் ஆண்டில் மதுரை நியூ விலங்குடியைச் சேர்ந்த எஸ்.இளையராஜா மற்றும் மற்றொரு நபருக்கு ஆதரவாக பவர் ஆஃப் அட்டர்னி பத்திரம் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இளையராஜாவின் மனைவி கவிதா உள்ளிட்ட மூவர் பெயரில் அடமானப் பத்திரமும் பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
கோயில் நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நில எடுப்புப் பிரிவு நேர்முக உதவியாளர் கே.அன்பழகன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வி.ராஜ்குமார் உள்ளிட்ட ஆறு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, 2016-ஆம் ஆண்டில் மதுரை வடக்கு வட்டாட்சியராகப் பணியாற்றியபோது, அன்பழகன் இந்த நிலத்தை ராமாயி மற்றும் பிறருக்கு சாதகமாக மாற்றிக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அன்பழகன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் ஜாமீன் கோரியும், ராமாயி உட்பட 13 பேர் முன்ஜாமீன் கோரியும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, நில மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அனைவரது ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரிக்கைகளையும் நிராகரித்து உத்தரவிட்டது. அரசு மற்றும் கோயில் சொத்துகளை முறைகேடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது.









