மதுராந்தகம் அருகே கார் விபத்து: பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்

மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்த விபத்தில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த கோர விபத்தில், தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி மாணவர்களுடன் வந்துகொண்டிருந்த கார், மதுராந்தகம் அருகே உள்ள ஹோட்டல் ஹைவே இன் என்ற இடத்திற்கு அருகில் வந்தபோது இந்த எதிர்பாராத துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததே விபத்திற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
விபத்தின்போது காரை ஹரிகிருஷ்ணன் (19) என்பவர் ஓட்டி வந்துள்ளார். டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையின் குறுக்கே சென்று தடம் புரண்டு, அங்கிருந்த சாலை மையத்தடுப்பு (மீடியன்) மீது பலமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்த தீபக்ராஜ் (19) மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த பியூட்ரின ஸ்டாலினிஜோ (22) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ் பிரசாத் (19) சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த லோகேஸ்வரன் (18), ராம் பிரசாத் (19), அனிஸ்வரன் (18) மற்றும் ஓட்டுநர் ஹரிகிருஷ்ணன் ஆகிய நான்கு மாணவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போதைய மருத்துவ நிலவரப்படி, காயமடைந்த நான்கு மாணவர்களின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மதுராந்தகம் காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய நீதி சம்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 281, 125(a) மற்றும் 106 ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான வாகனம் நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டது. இறந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அந்த தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.









