மதுரையில் போலீஸ் விசாரணைக்குப் பின் நபர் உயிரிழப்பு: குடும்பத்தினர் பகீர் புகார்

மதுரையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸார் மீது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த 52 வயதுடைய பரமசிவம் என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த இவர், கடந்த மாதம் சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது போலீஸாரால் தாக்கப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவி அய்யம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
சம்பவம் குறித்து அய்யம்மாள் கூறுகையில், கடந்த ஜூலை 17-ஆம் தேதி தங்களுக்கு அண்டை வீட்டாரால் ஏற்பட்ட வாகன நிறுத்துமிடம் தொடர்பான பிரச்சனை குறித்து புகார் அளிக்க இருவரும் சிந்தாமணி காவல் நிலையத்திற்குச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், போலீஸார் தங்களை மிரட்டியதால் அந்த புகாரைத் திரும்பப் பெற்றதாகவும், மறுநாள் காவல் நிலையத்திற்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் செல்லாத நிலையில், ஜூலை 19-ஆம் தேதி போலீஸார் நேரடியாக அவர்களின் வீட்டிற்கு வந்து தம்பதியினரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பரமசிவத்திற்கு கடும் தலைவலி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துவிட்டதாகவும் அவரது மனைவி வேதனை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து முறைப்படி புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.
மறுபுறம், போலீஸ் தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளன. இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களுக்கு எங்களிடம் சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த பரமசிவத்திற்கு நீண்டகாலமாக உடல்நலக் கோளாறுகள் இருந்ததாகவும், அதற்காக அவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்ட தொடர் சிகிச்சைகளைப் பெற்று வந்ததாகவும் விளக்கமளித்துள்ளனர். தற்போது பிரேத பரிசோதனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடத்தப்பட உள்ளது.









