தமிழகத்தில் பிரம்மாண்ட மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: சர்வதேச தரத்தில் கார் பந்தய மைதானம் அமையவுள்ளது

தமிழகத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று முதல்வர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மோட்டார் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் வகையிலும், இளைஞர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கும் நோக்கத்திலும் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் இந்த முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். உலகப்புகழ் பெற்ற பார்முலா 1, பார்முலா 2, பார்முலா 3 மற்றும் பார்முலா 4 ரக கார் பந்தயங்களை நடத்தும் அளவுக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த பந்தய மைதானம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டம் தமிழகத்தில் விளையாட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மோட்டார் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டுள்ள இளம் தலைமுறையினருக்குச் சிறந்த பயிற்சி களமாகவும் அமையும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்தியா, குறிப்பாகத் தமிழ்நாடு, ஏற்கனவே வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. கோவை போன்ற நகரங்களில் மோட்டார் விளையாட்டு வாகனங்கள் தயாரிப்பு பிரிவுகள் ஏற்கனவே செயல்பட்டு வருவது இந்த புதிய திட்டத்திற்கு கூடுதல் பலமாக அமையும். இந்த மையம் உருவாவது, மோட்டார் வாகன தயாரிப்பு சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாநில பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
தமிழகத்தில் ஏற்கனவே சென்னைக்கு அருகிலுள்ள இருங்காட்டுக்கோட்டையில் சென்னை சர்வதேச சர்க்யூட் மற்றும் கோவையில் காரி மோட்டார் ஸ்பீடுவே என இரண்டு பந்தய மைதானங்கள் உள்ளன. இவற்றில் தேசிய அளவிலான பார்முலா 3 மற்றும் பார்முலா 4 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், சர்வதேச தரத்திலான புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படுவது, சர்வதேச போட்டிகளை ஈர்க்கும் மையமாக தமிழகத்தை மாற்றும். ஊரகப் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கும் மோட்டார் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் உள்ளது, ஆனால் தற்போது போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத சூழலில், இந்த புதிய திட்டம் அவர்களுக்குப் பெரிய வாய்ப்பாக அமையும் என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னையின் வீதிகளில் இந்தியாவின் முதல் பார்முலா 4 இரவு நேர கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பதற்கான இடம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் பகுதி அல்லது கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள நடிகர் அஜித்குமார், தமிழக அரசின் இந்த விளையாட்டு முயற்சி வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.









