மேகமலை விவகாரம்: கடந்த கால அரசுகளின் தோல்வியே தற்போதைய போராட்டங்களுக்குக் காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

மேகமலை ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் முந்தைய ஆட்சிகளின் மெத்தனப்போக்கே தற்போதைய சிக்கலுக்குக் காரணம் என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
மேகமலை வனப்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், இதற்கு முந்தைய ஆட்சிகளின் தவறான அணுகுமுறையே முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இப்பகுதி வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டபோது, நில உரிமைகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க முந்தைய அரசுகள் தவறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த மே 29 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படியே நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நீதிமன்ற அமர்வுக்குப் பிறகு தமிழக அரசு தனது விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களின் சட்ட உரிமைகளைப் பாதுகாத்து, நிரந்தரத் தீர்வை எட்ட அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
கடந்த 1978-ஆம் ஆண்டு இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க முன்மொழியப்பட்டபோது, வன செட்டில்மென்ட் அதிகாரி நடத்திய விசாரணையில் மொத்தம் 168 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் குறித்து பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை முந்தைய ஆட்சிகள் சரியாகக் கையாளவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். தகுதியான நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டிருந்தாலோ அல்லது அவர்களின் கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்பட்டிருந்தாலோ, தற்போதைய பதற்றமான சூழலைத் தவிர்த்திருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இந்த விவகாரம் தொடர்பாகப் போராடி வரும் நிலையில், பல வழக்குகள் நீதிமன்றத்தில் பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக 2017-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மற்றும் அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்டப் போராட்டங்கள் முறையாகக் கவனிக்கப்படாததே தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கமளித்தார். சட்டத்தின்படி உரிய தீர்வுகளை வழங்குவதில் முந்தைய காலங்களில் இருந்த நிர்வாகக் குறைபாடுகளே இத்தகைய சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.









