நிறைவடைந்தது மோகன்லாலின் 'அதிமனோகரம்' படப்பிடிப்பு: டிசம்பரில் திரைக்கு வருகிறது

மோகன்லால் நடிப்பில் உருவாகும் அதிமனோகரம் படத்தின் படப்பிடிப்பு 115 நாட்களுக்குப் பிறகு நிறைவடைந்தது.
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மோகன்லால் மற்றும் இயக்குனர் தருண் மூர்த்தி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'அதிமனோகரம்'. நீண்ட நாட்களாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 115 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் படக்குழுவினர் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள இயக்குனர் தருண் மூர்த்தி, மோகன்லாலுடனான தனது பிணைப்பு குறித்தும் உணர்ச்சிகரமான குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் மோகன்லால் நீண்ட இடைவேளைக்குப் பிறகு காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி.எஸ். லவ்லஜான் எனும் பெயரிலான போலீஸ் அதிகாரியாக அவர் களமிறங்கியுள்ள இந்த திரைப்படம், காவல் துறை சார்ந்த விசாரணை மற்றும் குடும்ப உறவுகளை மையப்படுத்திய ஒரு குடும்ப கதையாகும். இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மீரா ஜாஸ்மின், நைஸி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களது கூட்டணி ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் திரைக்கதையை ரதீஷ் ரவி எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே புல்லிக்காரன் ஸ்டாரா, இஷ்க், ஆதி மற்றும் மஹாராணி போன்ற குறிப்பிடத்தக்க படங்களுக்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷிக் உஸ்மான் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு, ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளையும், விஷ்ணு கோவிந்த் சவுண்ட் டிசைனிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக வலுவான கூட்டணியுடன் உருவாகியுள்ள 'அதிமனோகரம்' திரைப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே உறுதி செய்துள்ளனர். மோகன்லால் மற்றும் இயக்குனர் தருண் மூர்த்தியின் முந்தைய இணைப்பான 'துடரும்' படத்திற்குப் பிறகு, இந்த இரண்டாவது கூட்டணி திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.









