வேலூர் அருகே காட்டில் சிக்கிய நாகாலாந்து சிறுவர்கள்: ரயில்வே பாதுகாப்புப் படையினர் அதிரடி மீட்பு

வேலூர் அருகே காப்புக்காட்டுப் பகுதியில் வழிதவறி சிக்கிக்கொண்ட நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் வழிதவறி சிக்கிக்கொண்ட 17 வயதுடைய இரண்டு நாகாலாந்து மாநில சிறுவர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் நடைபெற்றது. வேலை தேடி கேரளாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தச் சிறுவர்கள், எதிர்பாராத விதமாக ரயில் பயணத்தின் இடையே பாதியில் இறங்கியதால் இந்தப் பதற்றமான சூழல் உருவானது.
நாகாலாந்து காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் கே. பிரபுவின் வழிகாட்டுதலின் பேரில், உதவி ஆய்வாளர் பி.ஆர். முரளி மற்றும் தலைமைக் காவலர் ஜி. கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் 'ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா' திட்டத்தின் கீழ் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். முன்னதாக, இந்தச் சிறுவர்கள் தங்களது வீட்டிலிருந்து யாரிடமும் சொல்லாமல் கேரளாவுக்கு வேலை தேடிப் புறப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆந்திர மாநிலம் சமல்கோட் ரயில் நிலையத்தில் இயற்கை உபாதைக்காக இறங்கியபோது, அவர்கள் ஏறிய ரயில் புறப்பட்டுச் சென்றதால் அவர்கள் மீண்டும் புதிய பயணச்சீட்டு எடுத்து திருவனந்தபுரம் செல்லும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
பயணத்தின் போது ஏற்பட்ட அச்சம் காரணமாக, இரவு 10 மணி அளவில் இடையில் ஒரு பகுதியில் சிறுவர்கள் ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். பின்னர், ரயில் பாதையை விட்டு விலகிச் சென்ற அவர்கள், வேலூர் மாவட்டம் அம்மூர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று வழிதவறிவிட்டனர். பயணத்தின் போது அவர்களின் உடமைகள் மற்றும் பைகள் தொலைந்துவிட்டன. மேலும், கைப்பேசியின் மின்கலன் தீர்ந்துபோனதால், அவர்களால் உடனடியாகத் தங்களின் இருப்பிடத்தை குடும்பத்தினருக்குத் தெரிவிக்க முடியவில்லை. பின்னர், கைப்பேசியை மின்னேற்றம் செய்த பிறகு, அவர்கள் தங்கள் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு உதவி கோரினர்.
சிறுவர்களின் குடும்பத்தினர் உடனடியாக நாகாலாந்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர், அவர்கள் மூலமாக காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குச் செய்தி கிடைத்தது. சிறுவர்கள் பேசியது அவர்களின் தாய்மொழியான நாகா மொழி என்பதால், அவர்களுடன் தொடர்பு கொள்வதிலும், அவர்கள் இருந்த இடத்தைக் கண்டறிவதிலும் மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவால்கள் இருந்தன. இருப்பினும், விடாமுயற்சியுடன் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்த அதிகாரிகள், வனப்பகுதியின் உட்புறத்தில் சிக்கியிருந்த சிறுவர்களைக் கண்டுபிடித்துப் பாதுகாப்பாக மீட்டனர். இத்தகைய சவாலான சூழலில் சிறுவர்களை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினரின் துரிதமான செயலுக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.









