நீட் ரத்து மற்றும் எஃப்சிஆர்ஏ மசோதா திருத்தம்: தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றம்

நீட் தேர்வு மற்றும் எஃப்சிஆர்ஏ மசோதாவிற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும், சர்ச்சைக்குரிய எஃப்சிஆர்ஏ திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் அரசு தரப்பில் கொண்டுவரப்பட்ட இரு முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கல்வி மற்றும் சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் மாநில அரசின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, பல ஆண்டுகளாகப் படித்து வரும் மாணவர்களின் திறமையை ஒரே நாளில் நடக்கும் ஒரு தேர்வின் மூலம் மதிப்பிடுவது சமூக நீதிக்கு எதிரானது என்று அவர் சாடினார். நீட் தேர்வு தனியார் பயிற்சி மையங்களை வளர்ப்பதற்கும், மருத்துவக் கனவுடன் இருக்கும் மாணவர்களின் தற்கொலைகளுக்குமே வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து எழுந்த போராட்டங்கள், ஒன்றிய கல்வி அமைச்சரின் பதவி விலகலுக்கு வித்திட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜமோகன் எஃப்சிஆர்ஏ திருத்த மசோதா, 2026-க்கு எதிராகத் தீர்மானத்தை முன்வைத்தார். சிறுபான்மை அமைப்புகள் மற்றும் கல்வி, சுகாதார சேவைகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்களின் சொத்துக்களைக் கையகப்படுத்த வழிவகுக்கும் அம்சங்கள் இந்த மசோதாவில் உள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு நிதி விவகாரங்களில் வெளிப்படைத்தன்மையை அரசு வரவேற்பதாகவும், ஆனால் அதேசமயம் சட்டப்பூர்வ சொத்துரிமை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பறிக்கும் வகையில் எவ்வித ஒழுங்குமுறைகளும் இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தத் தீர்மானங்கள் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் ஆளுங்கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சிகளும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தின. முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு காலகட்டங்களில் தமிழ்நாடு சட்டமன்றம் எடுத்துள்ள நிலைப்பாடுகளையும் உறுப்பினர்கள் நினைவுகூர்ந்தனர். இறுதியாக, பாஜக உறுப்பினர் எம். போஜராஜன் நீட் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த நிலையில், மற்ற தீர்மானங்கள் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.









