தமிழக வேளாண் துறையில் புதிய மைல்கல்: வெற்றி வான்மகள் திட்டம் மூலம் பெண் ட்ரோன் விமானிகள் உருவாக்கம்
வேளாண் துறையில் பெண்களை தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்தும் வகையில் வெற்றி வான்மகள் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 2026-ஆம் ஆண்டை சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு வலுசேர்க்கும் வகையில் தமிழக அரசு தனது 2026-27-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் பெண்களை மையப்படுத்திய பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் மிக முக்கியமானது 'வெற்றி வான்மகள்' எனும் தொலைநோக்கு திட்டமாகும். விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தும் நோக்கில், பெண்களை ட்ரோன் இயக்குநர்களாக மாற்றும் புதிய படையை உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைதூர விமானி பயிற்சி நிறுவனத்தின் (Remote Pilot Training Organisation) மூலம் 500 பேருக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 100 பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ட்ரோன் விமானிகளுக்கான உரிமம் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்காக அரசு சார்பில் 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியை முடிக்கும் நபர்களில் 50 பெண்களுக்கு, 50 சதவீத மானியத்தில் நவீன விவசாய ட்ரோன்கள் வழங்கப்படும். இதற்காகக் கூடுதலாக 2.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உரமிடுதல், பூச்சிக்கொல்லி தெளித்தல் மற்றும் பயிர் கண்காணிப்பு போன்ற பணிகளைப் பெண்கள் தொழில்நுட்ப ரீதியாக மேற்கொண்டு, விவசாயத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க முடியும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, ஏற்கனவே பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் படை' செயல்படுத்தப்பட்டதைப் போல, வேளாண்மையைப் பாதுகாக்க 'வான்மகள் படை' உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி உலர்த்திகளை அமைப்பதற்கான அதிகபட்ச மானியம் 3.50 லட்சத்திலிருந்து 4.40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வேளாண் இயந்திர வாடகை மையங்களை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 4 கோடி ரூபாயில், 30 சதவீத நிதியுதவி பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு சொந்தமாக வாடகை மையங்களை நடத்த பெண்களுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
இவை தவிர, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வீட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க 'தமிழ்நாடு நுண்ணீர் காய்கறி வளர்ப்புத் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20,000 நுண்ணீர் காய்கறி வளர்ப்புத் தொகுப்புகள் முக்கிய நகரங்களில் விநியோகிக்கப்பட உள்ளன. அதேபோல், ஊரகப் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 50 சிறிய அளவிலான காளான் உற்பத்தி அலகுகளை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரசு கொண்டு வந்துள்ள இந்த முன்னெடுப்புகள், பெண்கள் வெறும் நலத்திட்டப் பயனாளிகளாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பம் தெரிந்த விவசாயிகளாகவும், சிறந்த தொழில்முனைவோர்களாகவும் உருவெடுப்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன.









