dhina anjal logo
முகப்பு/தமிழ்நாடுவணிகம்

தமிழகத்தில் பெண் தொழில்முனைவோருக்காக 9 புதிய தொழில்பேட்டைகள்: அமைச்சர் பி.மதன் ராஜா அறிவிப்பு

By Admin
02/09/2026
54 views
தமிழகத்தில் பெண் தொழில்முனைவோருக்காக 9 புதிய தொழில்பேட்டைகள்: அமைச்சர் பி.மதன் ராஜா அறிவிப்பு

தமிழகத்தில் மகளிர் தொழில்முனைவோருக்காக 237.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 மாவட்டங்களில் 9 புதிய தொழில்பேட்டைகளை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், எட்டு மாவட்டங்களில் ஒன்பது புதிய தொழில்பேட்டைகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பி.மதன் ராஜா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சுமார் 108.28 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள இந்தத் தொழில்பேட்டைகளுக்காக 237.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, பெண்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான நிலம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் தடையின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 5,100 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொழில்பேட்டைகள் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனமான சிட்கோ (SIDCO) மூலம் உருவாக்கப்பட உள்ளன. இதன்படி, சென்னை மாதவரத்தில் 7.73 ஏக்கர் பரப்பளவில் 115.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப்பெரிய தொழில்பேட்டை அமையவுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நரசிங்கநல்லூரில் 15 ஏக்கரில் 47.13 கோடி ரூபாயிலும், சேலம் பெரிய சீரகப்பாடியில் 15 ஏக்கரில் 18.3 கோடி ரூபாயிலும் தொழில்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் மதுரை திருவாதவூரில் 17.3 ஏக்கர் பரப்பில் 17.44 கோடி ரூபாயிலும், திருச்சி சூரியூர் மற்றும் மணப்பாறையில் முறையே 3.13 கோடி மற்றும் 15.60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தொழில்பேட்டைகள் உருவாக்கப்பட உள்ளன.

மேற்கண்ட மாவட்டங்களுடன், திருப்பத்தூர் மாவட்டம் மின்னூர் பகுதியில் 8.25 ஏக்கரில் 8.84 கோடி ரூபாயிலும், தூத்துக்குடி சங்கரப்பேரியில் 10 ஏக்கரில் 3.7 கோடி ரூபாயிலும், தஞ்சாவூர் பாளையப்பட்டியில் 10 ஏக்கரில் 8 கோடி ரூபாய் செலவிலும் தொழில்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளன. இதுதவிர, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் நிறுவனங்களின் தேவையைக் கருத்தில்கொண்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 234.38 ஏக்கர் பரப்பளவில் 171.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் கூடுதலாக 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் (EV) உதிரிபாகங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, புதிய மற்றும் தற்போதுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 20 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கான உதவித் திட்டங்கள் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்படும். மேலும், தஞ்சாவூரில் 10 கோடி ரூபாய் செலவில் கைவினை சுற்றுலா கிராமம் அமைக்கப்பட உள்ளது. இது பாரம்பரியக் கலைகளை மேம்படுத்துவதுடன், கைவினைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் ஒரு சிறப்பு மையமாகவும் செயல்படும். இத்தகைய முன்னெடுப்புகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From Dhinaanjal


no comments
கமெண்ட் செய்ய தொடங்கவும்

ஹேஷ்டேக்ஸ்

#LATEST NEWS
#தமிழகஅரசு
#தொழிற்பேட்டை
#மகளிர்மேம்பாடு
#சிறுவணிகம்
#வேலைவாய்ப்பு
#TamilNadu
#SIDCO
#MSME
#WomenEntrepreneur
#IndustrialGrowth
#Dhinaanjal
#Dinaanjal
#தினஅஞ்சல்
#திணஅஞ்சல்
#தினஅஞ்சல் பப்ளிகேஷன்ஸ்
#Dhinaanjalpublications
#Dinaanjalpublications