தயாரிப்பாளராக களமிறங்கும் நித்யா மேனன்: புதிய திரைப்படத்தை இயக்கும் டி.கே

நடிகை நித்யா மேனன் தனது தயாரிப்பு நிறுவனமான கியூரி புரொடக்ஷன்ஸ் மூலம் புதிய டார்க் காமெடி திரைப்படத்தில் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபலமான நடிகை நித்யா மேனன், தற்போது புதிய பரிமாணத்தில் திரைத்துறையில் காலடி எடுத்து வைக்கிறார். அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கியூரி புரொடக்ஷன்ஸ் மற்றும் லியோ விஷன் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நித்யா மேனன் முதல் முறையாக தயாரிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தை 'கவலை வேண்டாம்' மற்றும் 'யாமுருக்க பயமே' போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் டி.கே (Deekay) இயக்க உள்ளார். ஒரு சுவாரஸ்யமான கற்பனை கலந்த டார்க் காமெடி கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகிறது. பிரபல இயக்குநர் விக்ரம் கே.குமார் இந்த படத்திற்கு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுவது கூடுதல் சிறப்பம்சமாகும். லியோ விஷன் நிறுவனத்தின் தலைவர் வி.எஸ்.ராஜ்குமார் இந்த தயாரிப்பு பணியில் நித்யா மேனனுடன் இணைந்து செயலாற்றுகிறார்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்களும் தற்போது வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு ஏ.சக்திவேல் ஒளிப்பதிவாளராகவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 5' என்று பெயரிடப்பட்டுள்ளது. கதைக்களம், படத்தின் தலைப்பு மற்றும் பிற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகளில் பான்-இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள இந்த படைப்பின் மூலம் நித்யா மேனன் மீண்டும் திரையில் மின்ன உள்ளார். கடந்த ஆண்டு வெளியான 'இட்லி கடை' திரைப்படத்திற்குப் பிறகு, அவர் புதிய திட்டங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விக்ரம் கே.குமார் மற்றும் டி.கே போன்ற அனுபவம் வாய்ந்த திரைக்கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.









