தமிழகத்தில் இனி பத்திரப்பதிவிற்கு நேரில் செல்ல தேவையில்லை: ஆன்லைன் முறை அறிமுகம்

தமிழகத்தில் மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனைக்கான பத்திரப்பதிவு முறையை ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்யும் வசதியை முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனைக்கான பத்திரப்பதிவு நடைமுறையை முற்றிலும் எளிமைப்படுத்தும் வகையில், ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யும் புதிய வசதியை முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தொடங்கி வைத்துள்ளார். இந்த புதிய முயற்சியின் மூலம் பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது. இந்த நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் டி.லோகேஷ் தமிழ்செல்வன் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
புதிய நடைமுறையின் கீழ், சொத்துக்களைப் பதிவு செய்ய விரும்புவோர் பதிவுத்துறையின் இணையதளத்தில் தங்களுக்கு என தனிப்பட்ட பயனர் கணக்கை (Login ID) உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து சொத்து தொடர்பான ஆவணங்களை ஆன்லைன் வழியாகவே சமர்ப்பிக்கலாம். விற்பனையாளர், வாங்குபவர் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவரும் தங்களின் ஆதார் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பதிவுத்துறை அதிகாரிகள், விதிகள் முறைப்படி இருந்தால் 24 மணி நேரத்திற்குள் பதிவை முடித்துத் தர வேண்டும். ஏதேனும் குறைகள் இருந்தால், அதனைத் திருத்தம் செய்யக் கோரி பயனருக்கு அனுப்பவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. திருத்தம் செய்யத் திரும்ப அனுப்பப்படும் ஆவணங்களை 30 நாட்களுக்குள் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
பதிவு முழுமை பெற்றவுடன், சம்பந்தப்பட்ட பதிவு அதிகாரி தனது மின்னணு கையொப்பத்தை (Digital Signature) ஆவணத்தில் இடுவார். அதன் பிறகு அந்த ஆவணத்தை பயனர் தனது கணக்கிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, ஆவணங்களில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க அரசு புதிய தொழில்நுட்ப அம்சங்களை இணைத்துள்ளது. ஒவ்வொரு பதிவுக்கும் மாறும் வகையில் ஐந்து வண்ணங்களின் தனித்துவமான சேர்க்கை (Dynamic Random Colour Combination) பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆவணத்தின் உண்மைத்தன்மையை உரிமையாளர் எளிதாகச் சரிபார்க்க முடியும். அசல் பதிவு ஆவணத்தின் வண்ணப் பிரதியானது 60 நாட்கள் வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும் வகையில் இருக்கும்.
ஒவ்வொரு பக்கத்திலும் ஆவண எண், ஆவணத்தின் தன்மை மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி அடங்கிய க்யூஆர் (QR) குறியீடு இடம்பெறும். பதிவு அதிகாரியின் டிஜிட்டல் கையொப்பம் மூலம், ஆவணத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால், அதனை டிஜிட்டல் சரிபார்ப்பின் போது 'எக்ஸ்' குறியீடு மூலம் கண்டறிய முடியும். கட்டுமான நிறுவனங்கள் இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளன. முன்பு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகச் செலவான பத்திரப்பதிவு பணி, தற்போது வெறும் மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்துவிடுவதாக டியர்ஏ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரஞ்சித் ரத்தோட் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்களை விரைவுபடுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.









