பழனி மடம் நில மோசடி வழக்கு: கைதான வழக்கறிஞர் உயிரிழப்பு - மதுரையில் பரபரப்பு

பழனி மடம் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த வழக்கறிஞர் உடல்நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பழனி மடம் தொடர்பான நில மோசடி வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் (65) என்பவர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது தொடர்பாகச் சிறை நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தப் பாதிப்புகளுடன் இருந்த அன்வர்தீன், கடந்த ஜூலை 29-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
பார்வை குறைபாடு மற்றும் உடல் பக்கவாதம் காரணமாகத் தள்ளாடிய அவருக்குச் சிறை மருத்துவமனையில் சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த நில மோசடி வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி (CB-CID) காவல்துறை, நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் அன்வர்தீனைத் தனது காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்து மீண்டும் அவர் சிறைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை மாலை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகச் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், இரவு 10.40 மணி அளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவரது மரணம் குறித்து மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் ஜாமீன் மனுவை நீதித்துறை நடுவர் வெள்ளிக்கிழமை அன்றுதான் தள்ளுபடி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இந்த நில மோசடி வழக்கு, பின்னர் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது அன்வர்தீனின் மரணம் தொடர்பாகச் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, உடற்கூறாய்வு நடத்தப்படும் எனச் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









