சேலம் அருகே சோகம்: மாயமான 7 மாத கர்ப்பிணி கிணற்றில் சடலமாக மீட்பு

சேலம் அருகே காணாமல் போன கர்ப்பிணி இளம்பெண் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள வெள்ளாளபுரம் பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கோனாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பேரா கவுண்டரின் மகள் கோகிலா (23) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கோகிலாவிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் அவரை சமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இந்தத் தகவல் அவரது குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், கன்னியம்பட்டியைச் சேர்ந்த அம்சி (26) என்பவர் கோகிலாவின் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி கோகிலா, அம்சியுடன் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி கோகிலா திடீரென மாயமானார். இது தொடர்பாக அவரது தந்தை காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்திருந்தார். காவல்துறை அவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், வியாழக்கிழமை அன்று வெள்ளாளபுரம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதப்பதைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கொங்கணாபுரம் காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து, கிணற்றில் கிடந்த சாக்கு மூட்டையை மீட்டனர். அதற்குள் கோகிலாவின் சடலம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இறந்தவரின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு, உடலைக் கண்டு அவர்கள் அடையாளம் காட்டினர். இளம்பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கோகிலாவுடன் சென்ற அம்சி மற்றும் இது தொடர்பாக தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இளம்பெண்ணின் மரணம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.









