மலையாள திரையுலகில் புதிய மிரட்டல்: பிரித்விராஜ் - மஞ்சு வாரியரின் 'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்லுஷன்' படப்பிடிப்பு தொடக்கம்

பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் 'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்லுஷன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியது.
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்லுஷன். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற பாரம்பரிய பூசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், கேரளாவின் தொன்மக் கதையான 'ஒடிவித்யா' முறையை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு உருவங்களை எடுக்கும் திறன் கொண்ட ஒடியன் பற்றிய மர்மமான கதைக் களத்தை இந்தத் திரைப்படம் கொண்டுள்ளது.
இயக்குனர் ராகுல் சதாசிவன் ஏற்கனவே பூதகாலம், பிரம்மயுகம் மற்றும் டீஸ் இரே போன்ற திகில் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர். அந்த வரிசையில், இது அவரது நான்காவது திகில் முயற்சியாகும். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. மேலும், புகழ்பெற்ற பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ், மலையாளத் திரையுலகில் இந்தத் திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தைத் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் பிரம்மாண்டமான படைப்பினை வழங்குகின்றன.
இந்தத் திரைப்படத்தை கரண் ஜோகர், அதார் பூனாவாலா மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர். பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மேற்பார்வை பணிகளை மேற்கொள்கிறார். கேரளாவின் பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டுள்ள இந்தப் படம், மலையாளத்தில் மட்டும் வெளியாகாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பன்மொழித் திரைப்படமாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் மற்றும் படத்தொகுப்பாளர் ஷஃபிக் முஹம்மது அலி ஆகியோர் இணைந்து பணியாற்றுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு வி.ஏ. ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஒடியன் என்ற பெயரிலேயே ஒரு திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே கருப்பொருளின் அடிப்படையில் இந்த புதிய படம் உருவாகிறது. இதற்கிடையில், பிரித்விராஜ் சுகுமாரன் மேக்னா குல்சார் இயக்கத்தில் கரினா கபூர் கானுடன் இணைந்து நடிக்கும் 'தாயிரா' படத்திலும், எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகும் வாரணாசி படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். மஞ்சு வாரியர் நடிப்பில் 'நேரே சோவ்வா' மற்றும் 'ஹாப்பிலூப்' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகத் தயாராக உள்ளன.









